Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, உமதன்பு, நல்விருப்பம் ஆகியவற்றின் முழு அளவினை எனக்குத் தந்தருள்வீராக; அதிவிழுமிய ஆதாரமும், சர்வ ஒளிமயமானவரும் ஆனவரே, உமது பிரகாசமிகு ஒளியின் ஈர்ப்புகளின் வாயிலாக, எங்கள் இதயங்களைப் பரவசமடையச் செய்திடுவீராக. கோடையின் பிரபுவே, பகல் வேளையிலும் இரவு காலத்திலும், உமது வலுவூட்டும் இளந்-தென்றல்களை, உமது கிருபையின் ஓர் சின்னமாக என் மீது பொழிந்திடுமாறு செய்திடுவீராக.
என் கடவுளே, உமது திருவதனத்தைக் கண்ணுறத் தகுதி பெறுவதற்கு நான் எந்த நற்செயலையுமே செய்ததில்லை; இவ்வுலகம் நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்திருந்தாலும், இச்சலுகைக்காகத் தகுதி பெறுவதற்கு நான் எச் செயலையும் சாதித்திடத் தவறி விடுவேன் என, நான் நிச்சயமாக அறிவேன். ஏனெனில், உமது கொடை என்னை வந்தடைந்தால் அன்றி, உமது மென்கருணை என்னை ஊடுருவினால் அன்றி, உமது அன்பிறக்கம் என்னைச் சூழ்ந்திட்டால் அன்றி, ஓர் ஊழியனின் ஸ்தானம் உமது புனித சந்நிதானத்தை நெருங்குவதற்கு என்றுமே தகுதியற்றதாகவே இருக்கும். உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்பதற்குரியவரே, புகழ் எல்லாம் உமக்கே உரியதாகுக. உம்மை நெருங்கி உயர்ந்திடவும், உந்தன் அருகிலேயே வசித்திடும் பெருமையை வழங்கப்பெறுவதற்கும், உம்மோடு மட்டுமே உரையாடுவதற்கும், கிருபைகூர்ந்து என்னை இயலச் செய்வீராக. உம்மைத் தவிர கடவுள் வேறிலர்.
மெய்யாகவே, ஓர் ஊழியன் மீது நீர் ஆசி வழங்கிட விரும்பினால், நீர் அவனது இதயம் எனும் இராஜ்யத்திலிருந்து, உம்மைப் பற்றியே சொல்வதையல்லாது மற்றெல்லாச் சொல்லையோ, நினைவையோ அழித்திடுவீர்; மேலும், உமது வதனத்தின் முன், அவனது கரங்கள் அநீதியாக இழைத்திட்ட காரியங்களின் காரணமாக, நீர் ஓர் ஊழியனுக்குத் தீங்கினை விதித்திட்டால், அவன் அதில் தன்னைமறந்து ஈடுபடுவான் என்பதற்காகவும், உம்மைப் பற்றி நினைப்பதையே மறந்து விடுவான் என்பதற்காகவும், இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டு நீர் அவனைச் சோதித்திடுவீர்.
- The Báb