Return to BahaiPrayers.net
Facebook
அவரே கடவுள்! கடவுளே, என் கடவுளே! இவர்கள், உமது நாள்களில், உந்தன் புனிதத்தன்மை எனும் நறுமணங்களினால் ஈர்க்கப்பட்டும், உமது புனித விருட்சத்தில் எரியும் தீச்சுடரால் தூண்டப்பட்டும், உமது குரலுக்குச் செவிசாய்த்தும், உமது போற்றுதலை உச்சரித்தும், உமது தென்றலால் விழிப்பூட்டப்பட்டும், உமது இனிய நறுமணங்களினால் கிளர்வுற்றும், உமது அடையாளங்களைக் கண்ணுற்றும், உமது வசனங்களைப் புரிந்துகொண்டும், உமது வார்த்தைகளுக்குச் செவிசாய்த்தும், உமது வெளிப்பாட்டில் நம்பிக்கை வைத்தும், உமது அன்புக் கருணையில் நம்பிக்கைக் கொண்டுமுள்ள உமது ஊழியர்கள் ஆவர்.
பிரபுவே, பிரகாசமிகு பேரொளி எனும் உமது இராஜ்யத்தின்பால் அவர்களின் கண்கள் பதிந்துள்ளன; உயர்விலுள்ள உமது இராஜ்யத்தின்பால் அவர்களின் முகங்கள் திரும்பியுள்ளன; உமது பிரகாசமும் பேரொளியும் மிக்க அழகின் மீதான அன்பினால் அவர்களின் இதயங்கள் துடிக்கின்றன; உமது அன்பெனும் நெருப்பிற்கு அவர்களின் ஆன்மாக்கள் இரையாகிவிட்டன; இவ்வுலகு, மறுவுலகு ஆகியவற்றின் பிரபுவே, உம்மீதுள்ள ஏக்கம் எனும் ஆவலினால் அவர்களின் வாழ்க்கைகள் கொதிக்கின்றன; உமக்காகவே அவர்களின் கண்ணீர் வழிந்திடுகின்றன.
உமது காவல், பாதுகாப்பு எனும் வலுமிக்க அரணுள் அவர்களைக் காத்தருள்வீராக; உமது விழிப்புமிகு கவனத்தின் கீழ் அவர்களைக் கண்காணித்திடுவீராக; உமது வள்ளன்மை, இரக்கம் எனும் கண்களைக் கொண்டு அவர்களை கண்ணுற்றிடுவீராக; எல்லாப் பிரதேசங்களிலும் வெளிப்படையாகக் காணப்படும், உமது தெய்வீக ஒருமையின் அடையாளங்களாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது பிரம்மாண்ட மாளிகைகளின்மேல் பறந்திடுகின்ற உந்தன் வலிமையின் விருதுகொடிகளாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது வழிகாட்டல் எனும் வான் கோளங்களில் விவேகம் எனும் எண்ணெயைக் கொண்டு எரியும் பிரகாசமான விளக்குகளாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது அடைக்கலமளிக்கும் சுவர்க்கத்தின் அதி உச்சத்திலுள்ள, மரக்கிளைகளின் மீது பாடிடும் உமது அறிவெனும் தோட்டத்தின் பறவைகளாகவும், முடிவில்லா ஆழங்களில் உமது அதிவிழுமிய கருணையின் பேரில் பாய்ந்திடும் உமது வள்ளன்மை எனும் சமுத்திரத்தின் பெரும்-விலங்குகளாகவும் அவர்களை ஆக்கிடுவீராக.
பிரபுவே, எனதாண்டவரே! உமது ஊழியர்களான இவர்கள் தாழ்ந்தவர்கள், உயர்விலுள்ள உமது இராஜ்யத்தில் அவர்களை மேன்மைப்-படுத்திடுவீராக; இவர்கள் வலுவிழந்தவர்கள், உமது விழுமிய ஆற்றலினால் அவர்களை வலுப்படுத்திடுவீராக; இவர்கள் தாழ்த்தப்-பட்டவர்கள், அதி உயர்விலுள்ள உமது இராஜ்யத்தில் உமது பேரொளியை அவர்களுக்கு வழங்கிடுவீராக; இவர்கள் ஏழைகள், உமது மாபெரும் இராஜ்யத்தில் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கிடுவீராக. உயிரினங்கள் அனைத்தின் பிரபுவானவரே! ஆதலால், உமது உலகங்களில் நீர் விதித்துள்ள, கண்களுக்குப் புலனாகும், புலானாகா நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கிடுவீராக; இம்மண்ணுலகில் அவர்களைச் செழுமையுறச் செய்திடுவீராக; உமது அகத்தூண்டலைக் கொண்டு அவர்களின் உள்ளங்களை மகிழ்வுறச் செய்திடுவீராக; உமது சர்வபேரொளிமிக்க ஸ்தானத்திலிருந்து பரவிடும், உமது நற்செய்தியினால் அவர்களின் உள்ளங்களை ஒளிபெறச் செய்திடுவீராக; உமது அதி பெரும் ஒப்பந்தத்தில் அவர்களை உறுதிப்படுத்தி, உமது வள்ளன்மையினாலும், வாக்களிக்கப்பட்ட அருளினாலும் உமது சாசனத்தில் அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்திடுவீராக; அருள்மிகு, இரக்கமிக்கவரே! நீரே அருளாளர், சர்வவள்ளன்மை மிக்கவர்.
- `Abdu'l-Bahá