Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே என் கடவுளே, புகழும் மகிமையும் உமக்கே உரியதாகட்டும்! உமது அன்பெனும் புல்வெளியில் உம்மால் நடப்பட்டும், உந்தன் இறைமை எனும் விரல்களால் பேணி வளர்க்கப்பட்டும், தேர்ந்தெடுக்கப்பட்டதுமான ஓர் இளஞ்செடி இதுவாகும். நீர் உமது ஒருமை எனும் தோட்டங்களிலிருந்து வழிந்து வரும் நித்திய வாழ்வெனும் பகலுற்றிலிருந்து இச்செடிக்கு நீர் பாய்ச்சியுள்ளீர்; உமது மென்கருணை எனும் மேகங்களை, அதன் மீது உந்தன் தயைகளைப் பொழியவும் செய்துள்ளீர். இப்போது அது உமது தெய்வீகச் சாரம் எனும் பகலூற்றிலிருந்து அவதரித்த உந்தன் ஆசிகளின் நிழலின் கீழ் வளர்ந்தும் செழிப்படைந்தும் உள்ளது. அது இலைகளையும் மலர்களையும் மலரச் செய்து, உமது அற்புதப் பரிசுகள், அருட்கொடைகள் ஆகியவற்றின் அருளின் மூலமாக, கனிகளால் நிரப்பப்பட்டுள்ளது; மேலும் உமது அன்புக் கருணை எனும் திசையிலிருந்து மிதந்து வரும் நறுமணம் கமழ்ந்த இளந்தென்றலினால் தூண்டப்பட்டுள்ளது.
பிரபுவே! உமது நித்திய இராஜ்யத்தில் உள்ள புனிதமெனும் கூடாரங்களை அணிவித்தும், மீண்டும் இணைதல் எனும் அரங்கில் ஒற்றுமை எனும் சாராம்சங்களை அலங்கரித்துமுள்ள, உமது விசேஷ அருட்கொடை, தயை ஆகியவற்றின் பொழிவுகளால், இந்த இளஞ்செடியைச் செழிப்பாகவும், பசுமையாகவும், வளமாகவும் ஆகிடச் செய்வீராக.
பிரபுவே, உமது புலனாகா இராஜ்யத்திலிருந்து வெளிவரும் உந்தன் வலுவூட்டும் கிருபையைக் கொண்டு அவனுக்கு உதவிடுவீராக; உமது ஊழியர்களின் கண்களிலிருந்து மறைக்கப்-பட்டுள்ள சைனியங்களைக் கொண்டு அவனுக்கு உதவிடுவதோடு, உமது முன்னிலையில் அவன் ஓர் உறுதியான அடியெடுத்து வைப்பதற்கும் அருள்புரிவீராக. உம்மைப் பற்றி மொழிந்திட அவனது நாவினை அசையச் செய்தும், உந்தன் புகழைப் போற்றுவதற்கு அவனது இதயத்தை மகிழ்வுறவும் செய்வீராக. உந்தன் இராஜ்யத்தில் அவனது வதனம் ஒளிபெற்றிடவும், மேலுலகில் அவன் வளம்பெற்றிடவும், உமது சமயத்திற்குச் சேவையாற்றிடவும் கிருபைகூர்ந்து அவனை உறுதிப்படுத்துவீராக.
சர்வ சக்திமிக்கவரும், சர்வ ஒளிமயமானவரும், சர்வ வல்லவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá