Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, மெய்யாகவே நான் உமது ஊழியனும், உமது எளியோனும், உம்மை இறைஞ்சுபவனும், உமது இழிவான உயிரினமுமாவேன். உந்தன் பாதுகாப்பை நாடி நான் உம் வாசலை வந்தடைந்துள்ளேன். எல்லாப் படைப்புப் பொருள்களும் உமது விழுமிய சாராம்சத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும், உமது உள்ளார்ந்த உயிருருவை அணுகுவதிலிருந்து மறுக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் உணர்ந்துள்ள போதிலும், உமதன்பில் அல்லாது வேறெதனிலும் நான் மனநிறைவைக் கண்டிலன்; உமது நினைவில் அல்லாது வேறெதனிலும் பெருமகிழ்ச்சியைக் கண்டிலன்; உம்மிடம் அடிபணிவதில் அல்லாது வேறெதனிலும் ஆர்வம் கொண்டிலன்; உமதருகில் அல்லாது வேறெதனிலும் களிப்படைந்திலன்; உம்முடன் மீண்டும் ஒன்றிணைவதில் அல்லாது வேறெதனிலும் சாந்தமடைந்திலன்.
நான் உம்மை அணுகிட முயலும் வேளையிலெல்லாம், உமது கிருபையின் அடையாளங்களைத் தவிர வேறெதனையும் நான் என்னில் உணர்ந்திலன்; உமது அன்புக் கருணையின் வெளிப்பாடுகளைத் தவிர, வேறெதனையும் என் உயிருருவில் நான் கண்ணுற்றதில்லை.
எப்படைப்புப் பொருளுமே உம்முடன் தொடர்பு கொண்டிருக்க இயலாது என்றாலும், எதுவுமே உம்மைப் புரிந்துகொள்ள இயலாது என்றபோதும், உமது உயிரினமாக இருக்கும் ஒருவன், எங்ஙனம் உம்முடன் ஒன்றிணைதலை நாடிடவோ, உமது முன்னிலையை அடைந்திடவோ இயலும்?
உமது இராஜ்யத்தின் வெளிப்பாடுகளையும், உமது அரசாட்சியின் அற்புத சான்றுகளையும், நீர் அவனுக்கென விதித்துள்ள போதிலும், எவ்வாறு உமது தாழ்வான ஊழியன் ஒருவன் உம்மை அறிந்திடவோ, உமது புகழைப் பாடிடவோ இயலும்?
இவ்வாறே, படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும், அதன் உள்ளார்ந்த மெய்ம்மையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளின் காரணமாக, அது உமது முன்னிலை எனும் சரணாலயத்திலிருந்து தடுத்துவைக்கப் பட்டுள்ளது என்பதற்குச் சாட்சியம் பகர்கின்றது. உமது இறைமையின் புனித அரசவைக்கு ஏற்புடையவை, படைப்பு முழுவதும் அடையக்கூடிய அனைத்திற்கும் அப்பால் உள்ளவையாக இருந்தபோதிலும், உமது வசீகரத்தின் செல்வாக்கு நித்தியகாலமும் உமது கைவண்ணத்தின் மெய்ம்மைக்குள் இயல்பாகவே இருந்துள்ளன என்பது மறுக்கமுடியாததாகும்.
என் கடவுளே, உம்மை போற்றுவதற்குரிய எனது முழுமையான பலமற்ற நிலையையும், உமக்கு நன்றி செலுத்துவதற்கான எனது மிகுந்த ஆற்றலின்மையையும் இது சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறிருக்கையில், எங்ஙனம் நான், உமது தெய்வீக ஒற்றுமையை அறிந்துணரவோ, உமது போற்றுதல், உமது புனிதத்தன்மை, உமது பேரொளி ஆகியவற்றின் தெளிவான அடையாளங்களை அடைவதில் வெற்றிபெறவோ இயலும். அன்றியும், உமது வலிமையின் பேரால்; உமது சுய ஜீவனைத் தவிர வேறெதனையும் நான் நாடியதில்லை, உம்மைத் தவிர வேறெவரையும் நான் நாடிடப்போவதுமில்லை.
- The Báb