Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, என் மனவேதனையில், என் சுவர்க்கமே! எனது துயரங்களில் என் கவசமும் அடைக்கலமும் ஆனவரே! தேவையான வேளையில் எனது தஞ்சமும் புகலிடமுமானவரே. எனது தனிமையில் என் துணைவரே! எனது வேதனைகளில் என் ஆறுதலே, எனது ஏகாந்தத்தில் என் அன்பான தோழரே! என் கவலைகளின் வேதனைகளை நீக்குபவரே, பாவங்களை மன்னிப்பவரே!
தெய்வீக ஒருமைப்பாடெனும் இக்கால வட்டத்தில், உமது கட்டளைக்கு மாறாக நடந்திடும் அனைத்திலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும், கறையற்ற, மாசுபடியா நிலையில் நான் உமது அருள் என்னும் விருட்சத்தின் நிழலினைத் தேடுவதிலிருந்து என்னைத் தடுத்திடும் எல்லா அசுத்தங்களிலிருந்தும், என்னைத் தூய்மைப்- படுத்துமாறும், நான், மிகு ஆர்வத்துடன், என் உள்ளத்தினாலும், மனத்தினாலும், நாவினாலும், உம்மைக் கெஞ்சியவண்ணம் உந்தன்பால் முழுமையாகத் திரும்புகின்றேன்.
பிரபுவே, பலவீனர்களின் மீது கருணை காட்டுவீராக, நோயுற்றோரைக் குணப்படுத்துவீராக, கடுந் தாகத்தினைத் தணிப்பீராக. உமது அன்பெனும் நெருப்புக் கனன்றிடும் நெஞ்சத்தினை மகிழ்வுறச் செய்து அதனை உமது தெய்வீக அன்பு, உந்துதல் என்னும் சுடரினால் ஒளிரச் செய்வீராக.
தெய்வீக ஒற்றுமை எனும் கோயில்களுக்குப் புனிதம் எனும் ஆடை அணிவித்து, என் சிரசுக்கு உமது தயை எனும் மகுடத்தைச் சூட்டுவீராக.
உமது வள்ளன்மையெனும் கோளத்தின் பிரகாசத் தினைக் கொண்டு என் முகத்தினைப் பிரகாசிக்கச் செய்து, உமது திருவாயிலில் ஊழியம் செய்திட எனக்குக் கிருபை கூர்ந்து உதவிடுவீராக.
என் இதயத்தை உமது உயிரினங்களின்பாலான அன்பினால் நிரம்பி வழிந்தோடச் செய்து, நான், உமது கிருபையின் சின்னமாகிடவும், உந்தன்பால் பக்திகொண்டிடவும், என்னையே மறந்த நிலையில், உம்மை நினைவு கூர்ந்து வழிபட்ட வண்ணம், ஆனாலும், உம்மைச் சார்ந்தவற்றின்பால் என்றும் விழிப்புணர்வுடனும் இருந்திட அருள்வீராக.
கடவுளே, என் கடவுளே! உமது மன்னிப்பு, கிருபை, என்னும் மென்காற்று என்னை வந்தடைவதைத் தடுத்திடாதீர், உமது உதவி, தயை என்னும் கிணற்றூற்றுகளை எனக்குக் கிட்டாது செய்திடாதீர்.
உமது பாதுகாத்திடும் சிறகுகள் நிழலின் கீழ் என்னை இணைந்திட விடுவீராக; சகலத்தையும் காத்திடும் உமது கண் பார்வையினை என் மீது விழச் செய்வீராக.
உமது மக்கள் மத்தியில் உமது திருநாமத்தினைப் போற்றிப் புகழ்ந்திட என் நாவினைத் தளர்த்திடுவீராக; அதனால், மாபெரும் சபைகளில் என் குரல் எழுப்பப்பட்டு, என் உதடுகளிலிருந்து உம் புகழ் வெள்ளம் வழிந்திடக்கூடுமாக.
உண்மையாகவே, கிருபைமிக்கவரும், மேன்மை-மிக்கவரும், வலிமைமிக்கவரும், சக்திமிக்கவரும் நீரே.
- `Abdu'l-Bahá