Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, உமது வழியில் எங்கள் அடிச்சுவடுகளை உறுதிப்படுத்தி, உமக்குக் கீழ்ப்படிதலில் எங்களின் உள்ளங்களைப் பலப்படுத்துவீராக. உமது ஒருமைத் தன்மை என்னும் அழகின்பால் எங்கள் வதனங்களைத் திரும்பச் செய்து உமது தெய்வீக ஒற்றுமை என்னும் அடையாளங்களினால் எங்களின் உள்ளங்களைக் களிப்படையச் செய்வீராக. உமது கடாட்சம் என்னும் ஆடையினால் எங்களின் அங்கங்களை அழகுபடுத்தி எங்களின் கண்களை மறைத்திருக்கும் பாவத்திரையை விலக்கி எங்களுக்கு உமது அருள் என்னும் கிண்ணத்தை அளிப்பீராக; அதனால் படைப்புயிர் அனைத்தின் சாரமும் உமது பேரொளி தோற்றத்தின் முன்னால் உமது புகழைப் பாடிடுமாக. பிரபுவே, உமது கருணைமிக்கத் திருவாக்கினாலும், உமது தெய்வீக மெய்ம்மை என்னும் மறைபொருளாலும், நீர், உம்மை வெளிப்படுத்துவீராக; அதனால், எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் மேலாக எழுந்து, முணுமுணுப்பையும் அசைவுகளையும் கடந்த பிரார்த்தனையின் தெய்வீகப் பேரானந்தம் எங்களின் ஆன்மாக்களை நிரப்பிடக்கூடும்—அதனால், உமது பேரழகின் வெளிப்பாட்டின் முன் பொருள்கள் அனைத்துமே வெறுமையுடன் இரண்டறக் கலக்கக் கூடும்.
பிரபுவே! இவர்கள்தாம் உமது ஒப்பந்தத்திலும் இறுதிப் பத்திரத்திலும் நிலையாகவும் திடமாகவும் இருந்து, உமது மார்க்கத்தில் உறுதி என்னும் கயிற்றை இறுகப் பிடித்து, உமது பேரொளி என்னும் அங்கியின் நுனியைப் பற்றிக் கொண்டுள்ள ஊழியர்கள்.
பிரபுவே, உமது அருளினால் அவர்களுக்கு உதவி புரிந்து, உமது சக்தியால் அவர்களை உறுதிப்படுத்தி, உமக்குக் கீழ்ப்படிய அவர்களின் இடையினை வலுப்படுத்துவீராக.
மன்னிப்பவரும், அருள்பாலிப்பவரும் நீரே.
- `Abdu'l-Bahá