Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, என்னை உறக்கத்திலிருந்து எழச் செய்து, என் மறைவுக்குப்பின் என்னை வெளிக்கொணர்ந்து, அயர்ந்த நித்திரையிலிருந்து என்னை எழச் செய்தமைக்காக உம்மைப் போற்று-கின்றேன். எந்த வெளிப்பாட்டின் பகலூற்று மூலம் உமது சக்தி என்னும் விண்ணுலகங்களும் உமது மாட்சிமையும் ஒளிரவைக்கப்பட்டனவோ அவ்வெளிப்பாடு என்னும் பகலூற்றின் பிரகாசங்களின்பால் நான் எனது முகத்தைத் திருப்பியவனாகவும் உமது அடையாளங்களை ஏற்றவனாகவும் உமது திருநூலில் நம்பிக்கைக் கொண்டவனாகவும் உமது கயிற்றினை இறுகப் பற்றியவனாகவும் இக்காலைப் பொழுதினில் கண் விழித்துள்ளேன்.
உமது விருப்பம் என்னும் சக்தியின் வழியாகவும் உமது வலிந்தீர்க்கவல்ல நோக்கத்தின் ஆற்றலாலும் எனது உறக்கத்தில் நீர் எனக்கு வெளிப்படுத்தியவற்றினை உமது நேசிக்கப்-பட்டோரின் இதயங்களில் உள்ள அன்பு மாளிகைகளுக்கு உறுதியான அடித்தளமாகவும் உமது அருள், அன்புப் பரிவு என்னும் அடையாளங்களின் வெளிப்பாட்டிற்குச் சிறந்த கருவியாகவும் ஆக்கிடுமாறு உம்மை வேண்டிக் கேட்கிறேன்.
என் பிரபுவே, அதி மேன்மை மிக்க எழுது கோலின் வழியாக இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கக்கூடியவற்றினை எனக்கு விதித்தருள்வீராக. அனைத்தின் ஆதிக்கமும் உமது பிடியில்தான் அடங்கியுள்ளது என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்.
நீர் விரும்பியவாறு அவற்றை மாற்றிடுவீர். வலிமையும் நம்பிக்கையும் உடைய இறைவன் உம்மையன்றி வேறிலர். உமது ஆணையின்வழி இழிவைப் புகழாகவும் பலவீனத்தை வலிமையாகவும் சக்தியின்மையை வலுவாகவும் அச்சத்தினை அமைதியாகவும் சந்தேகத்தை உறுதிப்பாடாகவும் மாற்றவல்லவர் நீரே. வல்லமை மிக்கவரும் தயாளம் மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
உம்மை நாடுபவர் எவரையுமே நீர் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதில்லை, அன்றியும் நீர் உம்மை விரும்பியவர் எவரையுமே பின்தங்கச் செய்ததில்லை. உமது தயாளம் என்னும் சுவர்க்கத்தையும் உமது அருள்பாலிப்பு என்னும் பெருங்கடலையும் எனக்கு அருள்வீராக.
மெய்யாகவே, நீரே, சர்வ வல்லவரும் அதி சக்தி வாய்ந்தவரும் ஆவீர்!
- Bahá'u'lláh