Return to BahaiPrayers.net
Facebook
கருணைமிக்கப் பிரபுவே! இக்கூட்டத்தில் குழுமியிருக்கும் இவர்கள் உமது ஊழியர்கள், உமது இராஜ்யத்தின்பால் திரும்பியுள்ளனர், அவர்களுக்கு உமது அருள்பாலிப்பும், நல்லாசியும் தேவைப்படுகின்றது. இறைவா! வாழ்க்கையின் மெய்ப்பொருள்கள் அனைத்திலும் அடங்கிக் கிடக்கும் உமது ஒருமையின் அடையாளங்களை வெளிப்படுத்தித் தெளிவாக்குவீராக. நீர் மனிதர்களின் மெய்ப்பொருளில் மறைத்து வைத்துள்ள ஒழுக்கப் பண்புகளை வெளிப்படுத்தி மலர்ச்சியுறச் செய்வீராக.
கடவுளே, நாங்கள் செடிகளைப் போன்றவர்கள், உமது வள்ளன்மையோ மழையைப் போன்றது; உமது அருளினால் இச்செடிகளைச் செழிப்புற்று வளரச் செய்வீராக. நாங்கள் உமது ஊழியர்கள்; எங்களை லௌகீக வாழ்க்கை என்னும் சிறையிலிருந்து விடுவிப்பீராக. நாங்கள் அறிவற்றவர்கள்; எங்களை விவேகமடையச் செய்வீராக. நாங்கள் உயிரற்றவர்கள்; எங்களை உயிர்ப்பெறச் செய்வீராக. நாங்கள் உலகப் பற்றுடையவர்கள்; எங்களுக்கு ஆன்ம உணர்வை அளிப்பீராக. நாங்கள் இழந்தவர்கள்; உமது மர்மங்களில் எங்களைப் பங்குபெறச் செய்வீராக. நாங்கள் வறியவர்கள்; உமது எல்லையற்ற பொக்கிஷத்திலிருந்து எங்களை வளமுடை-யோராக்கி, ஆசீர்வதிப்பீராக. கடவுளே! எங்களைப் புத்துயிர் பெறச் செய்வீராக; எங்களுக்குக் கண் பார்வை அளிப்பீராக; எங்களுக்குக் கேட்குந்திறனை அளிப்பீராக; எங்களுக்கு வாழ்க்கையின் மர்மங்களை அறிவிப்பீராக; அதனால் இவ்வுலக வாழ்க்கையிலேயே இராஜ்யத்தின் இரகசியங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, நாங்கள் உமது ஒருமைத் தன்மையை ஒப்புக்கொள்ளக் கூடும். ஒவ்வொரு வழங்குகையும் உம்மிடமிருந்தே வெளிப்படுகின்றது; ஒவ்வோர் ஆசியும் உம்முடையதே.
நீரே வல்லவர், நீரே சக்தி மிக்கவர், நீரே அளிப்பவர், எக் காலத்தும் வள்ளன்மை மிக்கவரும் நீரே.
- `Abdu'l-Bahá