Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக! உமது பாதையில் கொடுந்துன்பங்கள் விளையா- விடில் உமது உண்மை அன்பர்கள் எவ்வாறு கண்டுகொள்ளப்படுவர்; மற்றும், உமதன்பின் பொருட்டுத் தாங்கிக் கொள்ளப்படும் சோதனைகளின்றி உமக்காக ஏங்குவோர் போன்றவர்களின் ஸ்தானம் எவ்வாறு வெளிப்படுத்தப்படும்? உமது வலிமையே எனக்குச் சான்று பகர்கின்றது! உம்மைப் போற்றுவோர் அனைவருக்கும் தோழர்களாய் இருப்பது அவர்கள் சிந்திய கண்ணீரேயாகும்; உம்மைத் தேடுபவருக்கு ஆறுதல் அளிப்பது அவர்கள் வெளிப்படுத்திடும் புலம்பலேயாகும்; மற்றும், உம்மைச் சந்திக்க விரைபவர்களின் உணவு அவர்களது உடைந்த உள்ளங்களின் துண்டுகளேயாகும்.
நான் உமது பாதையில் அனுபவிக்க நேர்ந்த மரணத்தின் கசப்பு, எனது சுவையுணர்வுக்கு எவ்வளவு இனிமையானது; எனது கணிப்பில், நான் உமது திருவாக்கினை மேன்மையுறச் செய்ததற்காக, எதிரிகளின் கணைகளை எதிர் கொண்டது எத்துணை மதிப்புடையதாகும்! என் இறைவா, உமது சமயத்தில் நீர் விரும்பியவற்றை எல்லாம் நான் ஒரே மடக்கில் உட்கொண்டிட அருள்வீராக; நீர், உமது அன்பில், கட்டளையிட்ட அனைத்தையும் என்பால் அனுப்பிடுவீராக. உமது ஒளியின் சாட்சியாக! நீர் விரும்பியதை மட்டுமே நான் விரும்புகின்றேன், நீர் எதனை நெஞ்சார நேசிக்கின்றீரோ அதனையே நானும் நெஞ்சார நேசிக்கின்றேன். உம்மிலேயே நான், எல்லா வேளைகளிலும் என் முழு நம்பியிருத்தலையும், நம்பிக்கையையும் வைத்துள்ளேன்.
என் இறைவா, இவ் வெளிப்பாட்டிற்கு உதவியாளராக, உமது நாமத்திற்கும் உமது இறைமைக்கும் தகுதி வாய்ந்தவராய்க் கருதப்படுவோரை எழுந்திடச் செய்யுமாறு நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; அதனால் அவர்கள், உமது உயிரினங்களிடையே என்னை நினைவு கூர்ந்தும், உமது நிலவுலகில் உமது வெற்றிச் சின்னங்களை ஏற்றிடவும் கூடும்.
உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh