Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே, உமது வள்ளன்மை-யாலும் தாராள குணத்தாலும் எனது துக்கத்தைப் போக்கி, உமது இறைமையினாலும், வலிமையினாலும் எனது துயரத்தை அகற்றிடுவீராக. என் இறைவா, எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பங்கள் என்னைச் சூழ்ந்துள்ள இவ் வேளையில், உந்தன்பால் முகத்தினைத் திருப்பிய நிலையில், என்னைக் காண்கின்றீர். உயிரினங்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய பிரபுவே, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களுக்கும் நிழல் கொடுப்பவரே; மனிதர்களின் உள்ளங்களையும் ஆன்மாக்களையும் ஆட்கொண்டிட்ட உமது நாமத்தாலும், உமது கருணைக் கடலின் அலைகளினாலும், உமது வள்ளன்மை என்னும் விடிவெள்ளியின் சுடரொளியினாலும், தங்களின் முகங்களை உமது திசையில் திருப்புவதிலிருந்து எந்தச் சக்தியும் தடுத்திடாத அன்பர்கள் எண்ணிக்கையில் என்னையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளுமாறு நாமங்களுக் கெல்லாம் அதிபதியாகிய, விண்ணுலகையெல்லாம் ஆக்கியவருமாகிய, உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்!
என் பிரபுவே, இந் நாளில் எனக்கு நேரிட்டுள்ளவற்றைப் பார்க்கின்றீர். என்னை உந்தன்பால் எழுந்து சேவை செய்யவும் உமது பண்புகளைப் பாராட்டவும் உதவக் கூடியவை எவையோ அவற்றை எனக்கு விதித்திடுமாறு உமது நாமங்களுக்குப் பகலூற்றானவரின் பெயரினாலும் உமது இயல்புகளுக்கு தோற்றிடமானவரின் பெயரினாலும் மன்றாடிக் கேட்கின்றேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், அதி சக்தியுடையவர், மனிதர் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் பழக்கமுடையவர்!
மேலும், இறுதியாக, என் காரியங்களை ஆசீர்வதித்து, என் கடன்களைத் தீர்த்து, எனது தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு உமது வதனத்தின் ஒளியின் பெயரால் உம்மிடம் யாசிக்கின்றேன்.
எவரது சக்திக்கும் எவரது ஆட்சிக்கும் ஒவ்வொரு நாவும் சாட்சியம் அளித்துள்ளதோ, எவரது மாட்சிமையையும் இறைமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்த ஒவ்வோர் உள்ளமும் ஒப்புக்கொண்டுள்ளதோ அவர்தான் நீர். செவிமடுத்து, பதிலளிக்கச் சித்தமாயுள்ள இறைவன் உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh