Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே எனதாண்டவரே, உந்தன் நாமம் புகழப்படுவதாக! எல்லாப் படைப்புப் பொருள்களையும் சூழ்ந்துள்ள உமது சக்தியினாலும், படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ள உமது அரசாட்சியினாலும், உமது விவேகத்தினுள் மறைந்திருந்த எதனைக் கொண்டு, உமது விண்ணையும் மண்ணையும் படைத்தீரோ, அந்த உமது திருவாக்கினாலும், உந்தன் மீதான அன்பிலும், உமது விருப்பத்திற்கு அடிப்பணிவதிலும் எங்களைப் பற்றுறுதியுடன் இருந்திடவும், உந்தன் வதனத்தின்பால் எங்கள் பார்வையைப் பதித்திடவும், உந்தன் புகழைப்பாடிடவும், எங்களை இயலச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். ஆதலால், என் கடவுளே, உமது உயிரினங்களின் மத்தியில் உந்தன் அடையாளங்களை எங்கும் பரவச் செய்திடவும், உந்தன் இராஜ்யத்தில் உமது சமயத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களுக்குச் சக்தியளிப்பீராக. உந்தன் உயிரினங்கள் உம்மைப் பற்றிக் கூறுவதிலிருந்து நீர் என்றென்றும் சுதந்திரமாக இருந்து வந்துள்ளீர்; என்றென்றும் அவ்வாறே தொடர்ந்து இருந்தும் வருவீர்.
நான் எனது முழு நம்பிக்கையை உந்தன் மீதே வைத்துள்ளேன்; உந்தன்பால் எனது முகத்தைத் திருப்பியுள்ளேன்; உமது அன்பு ஆதரவெனும் கயிற்றினை இறுகப் பற்றிக் கொண்டுள்ளேன், மற்றும் உமது கருணை எனும் நிழலை நோக்கி, நான் விரைந்துள்ளேன். என் கடவுளே, ஏமாற்றம் அடைந்தவனாக உமது வாசலிலிருந்து என்னைத் துரத்தி விடாதீர்; மற்றும் உந்தன் கிருபையை எனக்குத் தரமறுத்திடாதீர்; ஏனெனில், உம்மை மட்டுமே நான் நாடுகிறேன். என்றும் மன்னிப்பவரும், அதிவள்ளன்மையாளரும் உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
உம்மை அறிந்தோருக்கு இறையன்பரானவரே, புகழ் உமக்கே உரியதாகுக!
- Bahá'u'lláh