Return to BahaiPrayers.net
Facebook
எவரது அண்மை என் விருப்பமாகுமோ, எவரது முன்னிலை என் நம்பிக்கையாகுமோ, எவரது நினைவு என் ஆவலாகுமோ, எவரது ஒளி எனும் அரசவை என் இலக்காகுமோ, எவரது உறைவிடம் என் நோக்கமாககுமோ, எவரது நாமம் எனக்கு சிகிச்சையாகுமோ, எவரது அன்பு என் இதயத்தின் பிரகாசமாகுமோ, எவரது சேவை எனது அதிவுயரிய ஆர்வமாகுமோ, அவற்றுக்கெல்லாம் உரியவரே! உம்மை அறிந்தோரை, உம்மைப் பற்றிய அறிவெனும் அதிவிழுமிய சிகரங்களுக்கு உயரப் பறந்திடவும்; உம்மைப் பக்தியோடு பூஜிப்பவர்களை, உமது புனிதத் தயைகள் எனும் அரசவையின் சூழிடங்களுக்கு உயர்ந்திடவும் நீர் சக்தி அளித்துள்ள திருநாமத்தினால், உந்தன் முகத்தின்பால் என் முகத்தைத் திருப்பிடவும், எனது கண்களை உம்மீது பதித்திடவும், உந்தன் புகழை உரைத்திடவும், எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.
என் பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்தையும் மறந்தவனும், உமது கிருபை எனும் பகலூற்றை நோக்கித் திரும்பியவனும், உந்தன் அரசவையை நெருங்கிச் செல்லவேண்டும் எனும் ஆவலில், உம்மைத் தவிர மற்றனைத்தையும் கைவிட்டவனும், நானே. ஆகையால், உமது திருவதனத்தின் ஒளியின் பிரகாசங்களோடு ஒளிரும் அந்த இருக்கையின்பால் எனது கண்கள் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்ணுறுவீராக.
ஆகவே, என் இறையன்பரே, உந்தன் சமயத்தில் என்னைப் பற்றுறுதியாக இருந்திட இயலச் செய்யக்கூடியவற்றை என் மீது அனுப்பிடுவீராக; அதனால் நாஸ்திகர்களின் சந்தேகங்கள் என்னை உந்தன்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடாதிருக்கக் கூடுமாக.
மெய்யாகவே, சக்தியின் கடவுளும், ஆபத்தில் உதவுபவரும், சர்வ ஒளிமயமானவரும், சர்வவல்லவரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh