Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, என் அதி மிகு நேசரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் சமயத்தில் என்னை உறுதியாக ஆக்கிடுவீராக; நான் உமது ஒப்பந்தத்தை மீறாதவர்களுள் ஒருவனாகவும், அவர்களின் சொந்த வீண் கற்பனைகள் எனும் தெய்வங்களைப் பின்பற்றாதவருள் ஒருவனாகவும் கருதப்பட அருள்வீராக. ஆகையால், உமது முன்னிலையில் உண்மை எனும் ஓர் இருக்கையைப் பெற்றிட இயலச் செய்தும், உமது கருணை எனும் ஒரு சின்னத்தையும் எனக்குத் தந்தருள்வீராக; மேலும் அச்சமற்றோரும், துயருக்கு ஆளாகிடாதோருமாகிய உமது ஊழியர்களோடு என்னை ஒன்றிணையச் செய்வீராக.
என் பிரபுவே, என்னை என்னிடமே கைவிட்டு விடாதீர்; அன்றியும், உமது சொந்தத் தன்மையின் அவதாரமானவரை அறிவதிலிருந்து என்னை இழக்கச் செய்திடாதீர்; அல்லது உமது புனித முன்னிலையிலிருந்து விலகிச் சென்றோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டு விடாதீர். என் கடவுளே, உந்தன் அழகின்பால் அவர்களது பார்வையைப் பதித்திடும் சலுகையைப் பெற்றவர்களுள் ஒருவனாகவும்; அதனில் அவர்கள் எத்துணை இன்பத்தைப் பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்றால், விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய இராஜ்யங்களின் அரசாட்சிக்காகவோ, படைப்பெனும் இராஜ்யம் அனைத்திற்காகவோ, ஒரு கணநேரத்தைக்கூட பரிமாற்றம் செய்யாதிருப்போர்களாக இருக்கின்ற அவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொள்வீராக. என் பிரபுவே, உமது உலகின் மக்கள் கொடூரமாகத் தவறிழைத்துள்ள இந்நாள்களில் என் மீது கருணைக் காட்டுவீராக; எனவே, என் கடவுளே, உந்தன் மதிப்பீட்டில் நன்மையானதையும், தகுந்ததையும் எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, சர்வ சக்திமிக்கவரும், கிருபையாளரும், கொடைவள்ளலும், என்றும் மன்னிப்பவரும் நீரே ஆவீர்.
என் கடவுளே, செவிகள் கேளாமலும், கண்கள் குருடாகவும், நாவுகள் பேசவியலாமலும், இதயங்கள் புரிந்துகொள்ள இயலாமலும் உள்ளவர்களுள் ஒருவனாக நான் கருதப்-படாதிருக்க எனக்கு அருள்வீராக. பிரபுவே, அறியாமை, சுயநல ஆசை ஆகிய தீயிலிருந்து என்னை மீட்பீராக; உமது தலையாயக் கருணையின் சூழிடங்களுக்குள் என்னை நுழைந்திடச் செய்தும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை என் மீதும் பொழிந்திடுவீராக. நீர் விரும்பியதைச் செய்திடச் சக்தி படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே ஆவீர்.
- The Báb