Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, நேர்வழிக்குக் கொண்டுசெல்லும் பாதையைத் தேடுவோரை வழிநடத்துபவரே; நரகத்தின் கழிவுகளிலிருந்து வழிதவறிய, பார்வையிழந்த ஆன்மாக்களை விடுவிப்பவரே; நேர்மையானோருக்குப் பெரும் கொடைகளையும் தயைகளையும் வழங்கிடுபவரே; உந்தன் வெல்லவியலாத புகலிடத்தில் அச்சங்-கொள்வோரைப் பாதுகாப்பவரே; உந்தன் அதிவுயரிய தொடுவானத்தின் மீதிருந்து உம்மை நோக்கிக் குரல் எழுப்புவோரின் அழைப்புக்குப் பதிலளிப்பவரும் நீரே.
என் பிரபுவே, நீர் போற்றப்படுவீராக! கவனந்தவறியோரை நம்பிக்கையின்மை எனும் மரணத்திலிருந்து நீர் வழிகாட்டியும், உம்மை நெருங்கி வந்தோரைப் பயண இலக்கிற்குக் கொண்டுவந்தும் உள்ளீர்; உமது ஊழியர்களுள் உறுதியானோரை, அவர்களின் விருப்பமிகு ஆசைகளை நிறைவேற்றியதன் வழி, அவர்களை மகிழச் செய்துள்ளீர்; உமது அழகென்னும் இராஜ்யத்திலிருந்து, உமக்காக ஏங்குவோரின் முகங்களின் முன்னே, மீண்டும் ஒன்று சேர்த்தல் வாயிற்கதவுகளைத் திறந்து, அவர்களை பறிகொடுத்தல், இழத்தல், ஆகிய தீயிலிருந்து காப்பாற்றியுள்ளீர் – அதனால் அவர்கள், உந்தன்பால் விரைந்து சென்று, உமது முன்னிலையை அடைந்து, உமது வரவேற்கும் வாசலுக்கு வந்து, ஒரு தாராளப் பங்கெனும் பரிசுகளைப் பெற்றுள்ளனர்.
என் பிரபுவே, அவர்கள் தாகமுற்றிருந்தனர்; அவர்களின் வறண்ட உதடுகளுக்கு மீண்டும் ஒன்றுசேர்தல் எனும் நீரை வழங்கியுள்ளீர். மென்மையானவரே, வழங்கியருள்பவரே, உந்தன் அருட்கொடை, கிருபை ஆகிய களிம்பினைக் கொண்டு, நீர் அவர்களின் வேதனையைத் தணியச் செய்துள்ளீர்; உமது இரக்கமெனும் தலையாய மருந்தினைக் கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்துள்ளீர். பிரபுவே, உமது நேர்வழியில் அவர்கள் பாதங்களைத் திடமாக்கிடுவீராக; அவர்களுக்காக ஊசிமுனையின் காதினை அகலமாக்கிடுவீராக; அரசு ஆடைகளால் அணிவிக்கப்பட்டு, அவர்கள் பெற்றுள்ள புகழில் என்றென்றும் நடந்திடச் செய்வீராக.
மெய்யாகவே, தாராளமானவரும், என்றும் வழங்குபவரும், மதிப்புமிக்கவரும், அதி கொடையாளியும் நீரே ஆவீர். வல்லவரும், சக்திமிக்கவரும், உயர்வானவரும், வெற்றியாளருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
- `Abdu'l-Bahá