Return to BahaiPrayers.net
Facebook
எவரது அச்சுறுத்தும் மாட்சிமை முன் யாவும் நடுங்கி நிற்கின்றனவோ, எவரது பிடிக்குள் மனிதர்கள் அனைவரின் காரியங்களும் அடங்கியுள்ளனவோ, எவரது கிருபை, கருணை ஆகியவற்றின்பால், உயிரினங்கள் அனைத்தின் வதனங்களும் நோக்கியவாறு உள்ளனவோ, இவையனைத்துக்கும் உரியவர் நீரே! நாமங்கள் எனும் இராஜ்யத்தினுள் உள்ள அனைத்து நாமங்களின் ஆற்றலாகிட நீர் விதித்திட்ட உமது திருநாமத்தினால், உமது நாமங்கள் எனும் இராஜ்யத்தை நடுங்கச் செய்திட்ட இந்த திருவெளிப்பாட்டில், உம்மிடமிருந்து திரும்பியோடியோரிடமிருந்து, உமது அதி மாண்புமிக்க, அதி உயர்வுமிக்க தான் எனும் தன்மையின் உண்மையை மறுத்திட்டோரின் முணுமுணுப்புக்களிலிருந்தும் எங்களைப் பாதுகாக்கும்படி நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.
என் பிரபுவே, நான் உமது பணிப்பெண்களுள் ஒருத்தியாவேன்! உமது கருணைமிக்க அருட்கொடையின் சரணாலயத்தை நோக்கியும், உமது ஒளியினால் போற்றப்படும் திருக்கூடாரத்தை நோக்கியும் நான் என் முகத்தைத் திருப்பியுள்ளேன். உம்மைச் சார்ந்திராத அனைத்திலிருந்தும் என்னை தூய்மைப்படுத்துவீராக; உம்மை நேசிக்கவும், உமது விருப்பத்தை நிறைவேற்றவும் என்னைப் பலப்படுத்துவீராக; அதனால் உமது அழகினை நினைப்பதிலேயே நான் என்னை மகிழ்வுபெறச் செய்தும், உமது உயிரினங்கள் அனைத்தின் மீதுள்ள எல்லாப் பற்றுகளையும் துறந்திடக் கூடுமாக; மேலும், ஒவ்வொரு கணமும் “உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன், மேன்மைப்படுத்தப்படுவாராக!” என, ஒவ்வொரு கணமும், பிரகடனம் செய்திடக் கூடுமாக.
என் பிரபுவே, உமது அழகு எனது உணவாகிடவும், உமது முன்னிலையின் ஒளி எனது பானமாகிடவும், உமது இன்பம் எனது நம்பிக்கையாகிடவும், உம்மைப் போற்றுவதே எனது வேலையாகிடவும், உமது நினைவே எனது தோழனாகவும், உமது இறையாண்மையே எனது உதவியாகவும், உமது வாசஸ்தலமே எனது இருப்பிடமாகவும், உம்மிடமிருந்து ஒரு திரையைப்போன்று மறைக்கப்பட்டோரின் வரம்புகளுக்கு மேலாகத் நீர் உயர்த்தியுள்ள இருக்கையையே எனது இல்லமாக ஆக்கிடுவீராக.
உண்மையாகவே, நீரே சக்தி, வலிமை, பேரொளி ஆகிய இறைவனாவீர்.
- Bahá'u'lláh