Return to BahaiPrayers.net
Facebook
உலகின் பிரபுவும் நாடுகளின் ஆவலும் ஆகியவரே, ஒளி உமக்கே உரியதாகட்டும், அதி உயரிய நாமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவரே, அதன்வழி உமது அறிவு, தீர்க்கதரிசனம் என்னும் பெருங் கடலிலுள்ள சிப்பியிலிருந்து விவேகம், வெளியிடுகை எனும் முத்துக்கள் தோன்றியுள்ளதோடு, தெய்வீக வெளிப்பாடு என்னும் வானம், உமது வதனம் என்னும் சூரிய தோற்றத்தின் ஒளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
எச் சொல்லின் மூலம் உமது நிரூபணம் உமது படைப்பினங்களிடையே நிறைவுபடுத்தப்பட்டு, உமது ஊழியர்களிடையே உமது அத்தாட்சி நிறைவேற்றப் பட்டதோ, அதன் பெயரால் உமது மக்களை உறுதிப்படுத்துமாறு உம்மை நான் வேண்டுகின்றேன், அதன்வழி உமது சமயத்தின் வதனம் உமது இராஜ்யத்தினில் ஒளிக்கதிர்களை வீசிடும், உமது சக்தியின் கொடிகள் உமது ஊழியர்களிடையே நாட்டப்படும்; உமது இராஜ்யங்கள் முழுவதிலும் உமது வழிகாட்டல் என்னும் கொடிகள் ஏற்றப்படும்.
என் பிரபுவே! அவர்கள் உமது அருள் என்னும் கயிற்றினைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் உமது அன்புதவி என்னும் மேலங்கியின் விளிம்பினை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர். மேலும் உமதருகே ஈர்க்கக் கூடியதனை அவர்களுக்கு அருளி, உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் அவர்களைத் தடுத்திடுவீராக.
இருப்பனவற்றிற்கெல்லாம் மன்னரே, கண்களுக்குப் புலனாகும் புலனாகாதவற்றுக்கு எல்லாம் பாதுகாவலரே, உமது விருப்பத்திற்கேற்ப அசைந்திடும் கடலைப் போன்று, உமது சமயத்திற்குச் சேவை செய்ய எழுந்திடுபவரை உமது விருப்பம் என்னும் விண்ணுலகின் தொடுவானத்திலிருந்து பிரகாசித்திடும் புனித விருட்சத்தின் நெருப்பினால் பற்றி எரிகின்ற ஒருவராக ஆக்கிடுமாறு, நான் உம்மை வேண்டிக் கொள்கின்றேன். மெய்யாகவே, இவ்வுலகனைத்தின் சக்தியோ நாடுகளின் வலிமையோ வலுவிழக்கச் செய்ய இயலாத வல்லவர் நீரே. ஒருவரேயான, ஒப்புயர்வற்றவரான, சுயஜீவியரான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.
- Bahá'u'lláh