Return to BahaiPrayers.net
Facebook
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது
எவரேனும் எந்த இடத்திற்காவது போதனை செய்யப் பயணப்படுவாராயின், அவர் இந்தப் பிரார்த்தனையைப் பகலிலும் இரவிலும் அந்நிய நிலங்களில் அவர் பயணம் செய்கையில் ஒப்புவிக்கட்டுமாக.
கடவுளே, என் கடவுளே! நான் உமது மகத்துவமிக்க இராஜ்யத்தின்பால் வசீகரிக்கப்பட்டும், கவரப்பட்டும் இருப்பதை நீர் காண்கின்றீர். மனிதர்களிடையே உமதன்பெனும் நெருப்பினால் தூண்டப்பட்டு, இவ் விசாலமான பரந்த நிலங்களில் உமது இராஜ்யத்தின் முன்னோடியாக, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலும் இருந்து பற்றறுத்து, உம்மையே நம்பி, ஓய்வையும் சுகத்தையும் கைவிட்டு, என் தாயகத்திலிருந்து வெகு தூரமாக, இப்பகுதிகளில் ஒரு நாடோடியாக, மண்ணில் வீழ்ந்த ஓர் அந்நியனாக, உமது மேன்மை படுத்தப்பட்ட வாசலில் பணிவாக, உமது எல்லாம் வல்ல மேன்மை எனும் சுவர்க்கத்தின்பால் தாழ்மையுடன், நடு இரவிலும் வைகறையிலும் உம்மை இறைஞ்சி வேண்டி, காலை வேளையிலும் அந்திச்சாய்விலும், உமது சமயத்திற்குச் சேவை செய்திடவும், உமது போதனைகளை அயல்நாடுகளில் பரப்புவதிலும், கிழக்கு, மேற்கு அனைத்திலும் உமது திருமொழியை மேன்மைப்படுத்திடவும், எனக்குக் கருணைகூர்ந்து உதவுமாறு, உம்மைக் கெஞ்சி பிரார்த்திக்கின்றேன்.
பிரபுவே! என் முதுகைப் பலப்படுத்துவீராக, முழு முயற்சியோடு உமக்கு ஊழியம் செய்ய என்னை வலுப்படுத்துவீராக; இந்த நிலங்களில் என்னை தனியொருவனாகவும் துணையில்லாமலும் விட்டுவிடாதீர்.
பிரபுவே! எனது தனிமையில் உம்மோடு தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளிப்பீராக; இந்த அந்நிய நிலங்களில் எனக்குத் துணைவனாக இருப்பீராக.
மெய்யாகவே, உமக்கு விருப்பமான எவர் ஒருவரையும் நீர் விரும்புகின்றவற்றில் உறுதிபடுத்துபவர் நீரே. மெய்யாகவே சர்வ-வலிமையுள்ளவரும், சர்வபலம் பொருந்தியவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá