Return to BahaiPrayers.net
Facebook
மன்னித்தருளும் பிரபுவே! உமது இவ்வூழியர்களாகிய அனைவருக்கும் அடைக்கலமானவர் நீரே. நீர் இரகசியங்களை அறிவீர், யாவற்றையும் தெரிந்திருக்கின்றீர். நாங்கள் அனைவரும் ஆதரவற்றவர்கள், நீரே சக்தி மிக்கவர், எல்லாம் வல்லவர். நாங்களனைவரும் பாவிகள், நீரே பாவங்களை மன்னிப்பவர், கருணையாளர், இரக்கமுடையவர். பிரபுவே! எங்களின் குறைகளைக் கண்ணுறாதீர். உமது அருளுக்கும் வள்ளன்மைக்கும் ஏற்ப எங்களை நடத்துவீராக. எங்களின் குறைகளோ அதிகம், ஆனால், உமது மன்னிப்பெனும் சமுத்திரமோ எல்லையற்றது. எங்களின் பலவீனமோ கடுமையானது, ஆனால் உமது உதவி, சகாயம் ஆகியவற்றின் ஆதாரங்களோ தெளிவானவை. ஆகவே, எங்களை உறுதியும் பலமும் அடையச் செய்வீராக. உமது புனித நுழைவாயிலில் தகுதியானவற்றைச் செய்திட எங்களுக்கு உதவியளிப்பீராக. எங்களின் உள்ளங்களை ஒளி பெறச் செய்வீராக, எங்களுக்கு ஊடுருவிக் காணும் கண்களையும், கவனமுறும் செவிகளையும் அளிப்பீராக. மாண்டவர்களை உயிர்பெறச் செய்து, நோயுற்றோரைக் குணப்படுத்துவீராக. ஏழைகளுக்குச் செல்வம் வழங்கி, அஞ்சி நடுங்குவோருக்கு அமைதியும் பாதுகாப்பும் அளிப்பீராக. எங்களை உமது இராஜ்யத்தில் ஏற்றுக்கொண்டு, எங்களை வழிகாட்டுதல் என்னும் ஒளியினால் பிரகாசிக்கச் செய்வீராக. நீரே தாராளமானவர்; நீரே கருணையாளர்; நீரே அன்புடையவர்.
- `Abdu'l-Bahá