Return to BahaiPrayers.net
Facebook
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் கூற வேண்டியது.
பிரார்த்தனை செய்ய விரும்பும் ஒருவர் கைகளைக் கழுவட்டும்; அவ்வாறு செய்திடும் வேளையில் அவர் இவ்வாறு கூறட்டும்:
என் இறைவா, என் கரத்தினைப் பலப்படுத்துவீராக, அதனால் அது தன் முன்னால் உலகச் சேனைகளெல்லாம் சக்தியற்றுப் போய் விடுமளவு பற்றுறுதியுடன் உமது திருநூலினைக் கையிலெடுத்திடக் கூடும். பின்பு, அதனைத் தன்னுடையது அல்லாதவற்றில் தலை-யிடுவதிலிருந்து பாதுகாத்திடுவீராக. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், அதி சக்தியுடையவர்.
பிறகு அவர் முகத்தைக் கழுவிடும் பொழுது இவ்வாறு கூறட்டும்:
என் பிரபுவே, எனது முகத்தை உம்பால் திருப்பியுள்ளேன்! உமது வதனத்தின் பிரகாசத்தினால் அதனை ஒளி பெறச் செய்வீராக. பின்பு அதனை உம் ஒருவரைத் தவிர மற்றெவர்பாலும் திரும்பிடாதிருக்குமாறு பாதுகாப்பீராக.
பிறகு அவர் எழுந்து நின்று, கிப்லியின் திசையில் (வழிபாட்டிற்குரிய குறி, அதாவது பாஹ்ஜி, அக்காநகர்) முகத்தைத் திருப்பி இவ்வாறு கூறட்டும்:
தம்மைத் தவிர கடவுள் வேறு எவருமிலர் என்பதற்குக் கடவுளே சாட்சியமளிக்கின்றார். வெளிப்பாடு, படைப்பு என்னும் இராஜ்யங்கள் அவருடையவையே.
உண்மையாகவே, அவரே வெளிப்பாட்டின் பகலூற்றானவரையும் ஸைனாயில் உரையாடிய-வரையும், எவர் மூலமாக அதி உயரிய அடிவானம் பிரகாசிக்கச் செய்யப்பட்டு, கடந்து சென்றிட இயலா திருவிருட்சம் வாய் மலர்ந்ததோ, எவர் மூலமாக “அதோ சகலத்தையும் கொண்டுள்ளவர் வந்துவிட்டார்; உலகமும் சுவர்க்கமும் ஒளியும் இராஜ்யமும் மனிதர்களுக்கெல்லாம் பிரபுவானவரும், மேலுலகிலும் மண்ணுல-கிலுமுள்ள அரியாசனத்தைக் கொண்டுள்ள-வருமான இறைவனுடையதே” என்னும் அழைப்பு பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோ, அவரை, வெளிப்படுத்தியுள்ளார்.
பிறகு, அவர் குனிந்த பாங்கில் தனது கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறட்டும்:
எனது புகழ்ச்சிக்கும் என்னையன்றி மற்றவரின் புகழ்ச்சிக்கும், எனது வருணனைக்கும் விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ள அனைவரின் வருணனைக்கும் மேல் உயர்வானவர் நீரே.
பிறகு நின்றவாறு அவர் கைகளை விரித்து, தனது உள்ளங் கைகளை முகத்தை நோக்கி திருப்பிய வண்ணம் இவ்வாறு கூறட்டும்:
என் இறைவா, மன்றாடும் விரல்களினால் உமது கருணை, கிருபை என்னும் அங்கியின் நுனியைப் பற்றிக் கொண்டுள்ளவனைக் கருணை காட்டுபவர்களிலேயே அதி கருணையாளரான நீர் நம்பிக்கை இழக்கச் செய்திடாதீர்.
பிறகு அவர் அமர்ந்து கொண்டு இவ்வாறு கூறட்டும்.
உமது ஏகத்துவத்திற்கும் ஒருமைத் தன்மைக்கும், நீரே கடவுள் என்பதற்கும், உம்மையன்றிக் கடவுள் வேறிலர் என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன். நீர் மெய்யாகவே உமது சமயத்தை வெளிப்படுத்தியுள்ளீர். உமது ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்துள்ளீர்; மண்ணுலகிலும் விண்ணுலகிலும் வாழும் அனைவருக்கும் உமது அருட் கதவினை அகலத் திறந்துள்ளீர். எவரை இவ்வுலகின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் உம்பால் திரும்புவதிலிருந்து தடுத்திட இயலவில்லையோ, எவர் உம்மிடம் உள்ளவற்றைப் பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பின் காரணமாகத் தாம் கொண்டுள்ள அனைத்தையும் துறந்தனரோ அவ்வன்பர்களின் மீது அருளும் அமைதியும் வணக்கமும் ஒளியும் நிலைத்திடுமாக. நீர் உண்மையாகவே, என்றும் மன்னிப்பவர், சர்வ வள்ளன்மையாளர்.
(எவராவது, கூறுவதற்கு நீண்ட வாசகத்திற்குப் பதிலாக “ஆபத்தில் உதவுபவரும், தனித்து இயங்கவல்லவருமான அவரைத் தவிர கடவுள் வேறிலர் என்பதற்குத் தாமே சாட்சியம் ஆகின்றார்”, எனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பாராகில் அது போதுமானது. அவ்வாறே அவர் அமர்ந்தவாறு கூறுவதற்கு, “உமது ஏகத்துவத்திற்கும் ஒருமைத் தன்மைக்கும் உம்மையல்லாது இறைவன் வேறிலர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன்.” எனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பாராகில் அது போதுமானது.)
(பஹாவுல்லாவின் பிரார்த்தனையும் தியானமும் என்ற நூலிலிருந்து,182)
- Bahá'u'lláh