Return to BahaiPrayers.net
Facebook
இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கூறப்படவேண்டும்.
எவர் இப்பிரார்த்தனையைக் கூற விரும்புகின்றாரோ, அவர் எழுந்து நின்று கடவுள்பால் திரும்புவாராக. அவர் அவ்வாறு நிற்கையில் பெருங் கருணையும் இரக்கமும் கொண்ட அவரது ஆண்டவரின் கருணையை எதிர்பார்த்திருப்பது போன்ற பாவனையில் வலப்புறமும் இடப்புறமும் அவரது பார்வையைச் செலுத்தட்டும். பின் அவர் இவ்வாறு கூறுவாராக:
நாமங்கள் அனைத்திற்கும் அதிபதியும் விண்ணுலகங்களைப் படைத்தவரும் நீரே! அதி மேன்மையும் எல்லா மகிமையும் மிக்க, கண்ணுக்குப் புலனாகா, உமது சாராம்சத்தின் பகலூற்றுகள் மூலமாக உம்மை இறைஞ்சு கின்றேன். என் பிரார்த்தனையை உமது அழகிலிருந்து என்னை மறைத்திடும் திரைகளை எரித்திடும் நெருப்பாகவும் உமது முன்னிலை எனும் சமுத்திரத்திற்கு வழிகாட்டிடும் ஒளி விளக்காகவும் ஆக்கிடுவீராக.
பிறகு ஆசீர்வதிப்பும் மேன்மையும் மிக்கக் கடவுள்பால் அவர் தமது கரங்களை இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் உயர்த்தி இவ்வாறு கூறுவாராக:
உலகின் ஆவலானவரே! நாடுகளின் நேசரே! உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் உள்ள பற்றினைத் துறந்து, உமது இயக்கத்தின் மூலம் படைப்பினம் முழுவதையுமே கிளர்ந்தெழச் செய்த உமது கயிற்றினை இறுகப் பற்றி, உம்மை நோக்கி நான் திரும்பியுள்ளதை நீர் காண்கின்றீர். என் பிரபுவே, நான் உமது ஊழியனும் உமது ஊழியனின் மைந்தனுமாவேன். உமது விருப்பத்தினையும் உமது அவாவினையும் நிறைவேற்ற நான் சித்தமாய் நிற்பதையும் உமது நல்விருப்பத்தையன்றி மற்ற எதனையும் நான் விழையாதிருப்பதையும் காண்கின்றீர். உமது ஊழியனை உமது விருப்பத்தின்படியும் திருவுளத்தின்படியும் நடத்துமாறு உமது கருணை என்னும் சமுத்திரத்தின் மூலமாகவும் கிருபை என்னும் பகல் நட்சத்திரத்தின் மூலமாகவும் உம்மை நான் மன்றாடிக் கேட்கின்றேன். எல்லாக் குறித்துரைக்கும் புகழ்ச்சிக்கும் அதி மேலான உமது வலிமையின் சாட்சியாக! உம்மால் வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அதுவே என் இதயத்தின் ஆவலும் என் ஆன்மாவின் அன்புக்குரியதுமாகும். கடவுளே, என் கடவுளே, எனதாவல்களையும் எனது செய்கைகளையும் கண்ணுறாதீர்! மாறாக, மண்ணுலகையும் விண்ணுலகங்களையும் உள்ளடக்கியுள்ள உமது விருப்பத்தினையே கண்ணுறுவீராக. தேசங்கள் யாவற்றுக்கும் பிரபுவானவரே, உமது அதி உயரிய நாமத்தின் சாட்சியாக! நீர் விரும்பியதையன்றி வேறெதனையும் நான் விரும்பியதில்லை; நீர் எதனை நேசிக்கின்றீரோ அதனையே நானும் நேசிக்கின்றேன்.
பின் அவர் மண்டியிட்டுத் தன் நெற்றியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இவ்வாறு கூறுவாராக:
உம் ஒருவரது வருணனையைத் தவிர மற்றெல்லாரது வருணனைக்கும், உமது ஒருவரது புரிந்துகொள்ளலைத் தவிர மற்றெல்லாரது புரிந்துகொள்ளலுக்கும் அதி மேலானவர் நீரே.
பின் அவர் எழுந்து நின்று இவ்வாறு கூறுவாராக:
என் பிரபுவே, என் பிரார்த்தனையை ஒரு ஜீவநீர் ஊற்றாக ஆக்குவீராக. அதனால் உமது அரசுரிமை நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்து, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் உம்மைப் பற்றிக் கூறிடுவேன்.
பின் அவர் மீண்டும் தன் கரங்களை இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் உயர்த்தி, இவ்வாறு கூறுவாராக:
உம்மிடமிருந்து பிரிவுற்றதால் இதயங்களும் ஆன்மாக்களும் உருகின; உமது அன்புத் தீயினால் உலகமுழுமையும் கிளர்ச்சி கொண்டது! மனிதர் யாவர் மீதும் ஆட்சி புரிபவரே! படைப்பினம் முழுவதையும் கீழ்ப்படியச் செய்த உமது நாமத்தின் சாட்சியாக உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உம்மிடம் இருப்பதை எனக்குக் கொடுக்காது இருந்து விடாதீர்! என் பிரபுவே, உமது கம்பீரம் என்னும் விதானத்தின் கீழும் உமது கருணை என்னும் எல்லைகளுக்குள்ளாகவும் உள்ள தனது அதி உயரிய உறைவிடத்தை நோக்கி இந்த அந்நியன் விரைந்து செல்வதையும், இப்பிழையோன் உமது மன்னிப்பு எனும் சமுத்திரத்தையும், இத்தாழ்ந்தோன் உமது புகழ் எனும் அவையினையும் இவ் வறிய சிருஷ்டியானவன் உமது செல்வம் எனும் ஒளிச்சுடரையும் தேடுவதை நீர் காண்கின்றீர். நீர் எதனை விரும்புகின்றீரோ அதனைக் கட்டளையிடும் அதிகாரம் உமக்கே உரியதாகும். உமது செயல்களில் நீர் போற்றப்பட வேண்டும் என்பதற்கும் உமது கட்டளைகளில் நீர் வணங்கிடப்பட வேண்டும் என்பதற்கும் உமது ஆணைகளில் நீர் என்றும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் நானே சாட்சி.
பின் அவர் தன் கரங்களை உயர்த்தி, அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அவர் புகழும் மேன்மையும் மிக்க இறைவன் முன் குனிந்த பாங்கில் தன் கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறுவாராக:
என் கடவுளே, உம்மை வழிபடும் தனது ஏக்கத்திலும், உம்மை நினைவு கூர்வதிலும், உம்மை உயர்த்திப் புகழ்வதிலும், அது கொண்ட பேராவலில் எங்ஙனம் எனதான்மா எனது அங்கங்களிலும் அவயவங்களிலும் கிளர்ச்சியுறச் செய்யப்-பட்டுள்ளது என்பதையும், எதற்கு உமது வெளியிடுகை என்னும் இராஜ்யத்திலும், உமது அறிவு என்னும் சுவர்க்கத்திலும், உமது கட்டளை என்னும் நா சாட்சியம் கூறிற்றோ, அதற்கு எங்ஙனம் எனதான்மா சாட்சியம் கூறுகின்றது என்பதையும் நீர் காண்கின்றீர். என் பிரபுவே, இந் நிலையில் உம்மிடமுள்ள யாவற்றையும் எனக்குத் தந்து அருளுமாறு உம்மை மன்றாடிக் கேட்க விழைகின்றேன். அதனால், நான் எனது வறுமையை மெய்ப்பித்துக் காட்டி உமது அருட்கொடையினையும் செல்வங்களையும் மிகைப்படுத்திடவும் எனது வலுவின்மையைப் பிரகடனப்படுத்தி, உமது ஆற்றலையும் வலிமையையும் வெளிப்படுத்தவும் கூடும்.
பின் அவர் எழுந்து நின்று இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் தன் கரங்களை இரு முறை உயர்த்தி, பின் இவ்வாறு கூறுவாராக.
சர்வ வல்லமை பொருந்தியவரும், மாபெரும் வள்ளலுமான கடவுள் உம்மையன்றி வேறிலர். ஆதியும் அந்தமும் ஆகிய இரண்டிலும் விதித்தருளும் இறைவன் உம்மையன்றி வேறிலர். கடவுளே, என் கடவுளே, உமது மன்னிக்குந் தன்மை எனக்குத் துணிவைத் தந்தது; உமது கருணை என்னைப் பலப்படுத்தியது; உமது அழைப்பு என்னை விழிப்புறச் செய்தது; உமது கிருபை என்னை எழச் செய்து, உந்தன்பால் வழிநடத்திச் சென்றது. அவ்வாறில்லையெனில் உமது அருகாமை எனும் நகரின் முன் வாயிலில் துணிவுடன் நிற்கவோ, உமது விருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து ஒளிரும் விளக்குகளின்பால் எனது முகத்தைத் திருப்பவோ நான் யார்? என் பிரபுவே, இந்த ஈன சிருஷ்டியானவன் உமது கிருபை என்னும் கதவினைத் தட்டுவதையும் அநித்தியமான இவ்வான்மா உமது அருட்கொடை என்னும் கரங்களிலிருந்து நித்திய வாழ்வு என்னும் நதியைத் தேடுவதையும் நீர் காண்கின்றீர். நாமங்கள் யாவற்றுக்கும் அதிபதியே, எல்லாக் காலங்களிலும் ஆணையிடும் அதிகாரம் உமக்கே உரியதாகும். விண்ணுலகங்களைப் படைத்து அருளியவரே, உமது விருப்பத்திற்குச் சரணடைந்து, உளமாறக் கீழ்ப்படிதல் எனக்குரியதாகும்.
பிறகு அவர் தன் கரங்களை மும்முறை மேலுயர்த்தி, (ஒவ்வொரு முறை கரங்களை மேலுயர்த்தும் போதும்) இவ்வாறு கூறுவாராக:
உயர்ந்தோர் ஒவ்வொருவரினும் அதி உயர்ந்தவர் இறைவனே!
பிறகு அவர் மண்டியிட்டுத் தன் நெற்றியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இவ்வாறு கூறுவாராக:
உமது அருகில் உள்ளோர்களின் புகழுரை உமது அருகாமை என்னும் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லவோ, உம்மிடம் பக்தி கொண்டோரின் இதயங்கள் என்னும் பறவைகள் உமது வாயிற் கதவினை அடையவோ இயலாத அளவிற்கு நீர் அதி உயர்ந்திருக்கின்றீர். பண்புகள் அனைத்திற்கும் மேலாகப் பரிசுத்தமானவராயும் நாமங்கள் அனைத்திற்கும் மேலாகப் புனித மிக்கவராயும் இருந்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. அதி மேன்மைமிக்கவரும் சகல மகிமை பொருந்தியவருமான கடவுள் உம்மையன்றி வேறிலர்.
பிறகு அவர் அமர்ந்தவாறு இவ்வாறு கூறுவாராக:
நீரே கடவுள், உம்மையன்றி கடவுள் வேறிலர் என்பதற்கும் அவதரிக்கச் செய்யப்பட்டுள்ளவர், மறைபுதிரும் பொக்கிஷமும் எனப் பாதுகாக்கப்பட்ட சின்னமுமானவர் என்பதற்கும் அவர் மூலமே “ஆ” மற்றும் “கு” (ஆகு) என்பதன் அட்சரங்கள் இணைக்கப்பட்டு ஒன்றாய்ப் பின்னப்பட்டுள்ளன என்பதற்கும் எல்லாப் படைப்பினங்களும் உயர்விலுள்ள விண் கூட்டத்தினரும் அதி உயர்வான சுவர்க்கவாசிகளும் அவற்றுக்கும் அப்பால் சர்வ மகிமை பொருந்திய அடிவானத்திலிருந்து மகோன்னதரின் நாவும் சாட்சியம் அளித்திருத்திருப்பதற்கும் நானும் சாட்சியம் அளிக்கின்றேன். அதி பெரும் உயர்வுமிக்கோனின் எழுதுகோலால் குறிக்கப்- பட்டுள்ளவரும் மேலுலக அரியணைக்கும் மண்ணுலக அரியணைக்கும் அதிபதியாகிய கடவுளின் திருநூல்களில் குறிப்பிடப்- பட்டுள்ளவரும் அவரே என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்.
பிறகு எழுந்து நின்று இவ்வாறு கூறுவாராக:
படைப்பினம் அனைத்திற்கும் அதிபதியே! கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்தையும் உடைமையாகக் கொண்டவரே! நீர் என் கண்ணீரையும் நான் விடும் பெருமூச்சினையும் காண்கின்றீர்; என் வேதனைக் குரலையும் என் புலம்பலையும் என் இதயத்தின் கதறலையும் கேட்கின்றீர். உமது வல்லமையின் சாட்சியாக! எனது வரம்பு மீறிய செயல்கள் உம்மை நெருங்கி வருவதினின்று என்னைத் தடுத்துள்ளன; எனது பாவங்கள் உமது புனித அவையிலிருந்து என்னைத் தூரத்தே நிறுத்தி வைத்துள்ளன. என் பிரபுவே, உமது அன்பு என்னைச் செல்வந்தனாக்கியுள்ளது; உம்மிடமிருந்து பிரிவு என்னை அழித்துள்ளது. உம்முடன் தொடர்பின்மை என்னை இல்லாதானாக்கியுள்ளது. இவ் வனாந்திரத்தில் உமது அடிச்சுவடுகளின் சாட்சியாகவும், இம்முடிவில்லா பெரும் பரப்பினில் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் உதிர்த்திட்ட “இதோ நான் இங்கே, இதோ நான் இங்கே”, என்னும் சொற்களின் சாட்சியாகவும், உமது வெளிப்பாட்டின் மூச்சுகளின் சாட்சியாகவும், உமது அவதாரம் என்னும் அதிகாலையின் தென்றல் காற்றுகளின் சாட்சியாகவும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உமது அழகினைக் கண்ணுறவும், உமது புனித நூலில் உள்ளனவற்றை யெல்லாம் பின்பற்றவும் எனக்கு அருள்பாலிப்பீராக.
பிறகு அவர் அல்லா-உ-அப்ஹா எனும் அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரிக்க வேண்டும். பிறகு குனிந்த பாங்கில் தனது கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறுவாராக:
என் கடவுளே, நான் உம்மை நினைவு கூர்ந்து போற்றிப் புகழ்ந்திட உதவியமைக்காகவும், உமது அடையாளங்களின் பகலூற்றான அவரை நான் அறிந்திடச் செய்தமைக்காகவும், உமது பிரபுத்துவத்தின் முன்னிலையில் என்னைத் தலை வணங்கச் செய்தமைக்காகவும், உமது இறையம்சத்தின் முன்னிலையில் என்னைப் பணிவாக நடந்திடச் செய்தமைக்காகவும், உமது மகோன்னதத்தின் நாவினால் நவின்றவற்றினை ஏற்றுக் கொள்ளச் செய்தமைக்காகவும் நீர் போற்றப்படுவீராக.
பிறகு அவர் நிமிர்ந்து நின்று இவ்வாறு கூறுவாராக:
கடவுளே, என் கடவுளே! என் பாபச் சுமையினால் எனதுடல் வளைமுதுகாகியது. எனது கவனமின்மை என்னை அழித்துள்ளது. எனது தீயச் செயல்களையும் உமது தயவினையும் நான் ஆழ நினைத்திடும் போதெல்லாம் என் நெஞ்சம் என்னுள் உருகுகின்றது; என் நாளங்களில் என் இரத்தம் கொதிக்கின்றது. உலகின் ஆவலே! உமது அழகின் சாட்சியாகக் கூறுகின்றேன்; உம் முன் என் முகத்தை உயர்த்திட நாணுகின்றேன்; உமது அருட்கொடை என்னும் சுவர்க்கத்தை நோக்கி நீண்டிட என் ஏங்கும் கரங்கள் வெட்கங் கொள்கின்றன.
மேலுலக அரியணைக்கும் கீழே மண்ணுலக அரியணைக்கும் அதிபதியானவரே, எங்ஙனம் என் கண்ணீர் உம்மை நினைவு கூர்வதிலிருந்தும் உமது பண்புகளைப் போற்றுவதிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளது என்பதை நீர் காண்கின்றீர். படைப்பிற்கெல்லாம் அதிபதியே! கண்ணுக்குப் புலனாகும் கண்ணுக்குப் புலனாகா அனைத்திற்கும் அரசரே! உமது இராஜ்யத்தின் அடையாளங்களின் சாட்சியாகவும் உமது அரசாட்சியின் மர்மங்களின் சாட்சியாகவும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உமது அன்பர்களை உமது அருட்கொடைக்கும் கிருபைக்கும் பொருந்த நடத்திடுவீராக.
பிறகு “அல்லா-உ-அப்ஹா” என்னும் அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரித்ததும், மண்டியிட்டுத் தன் நெற்றியினால் தரையைத் தொட்டு இவ்வாறு கூறுவாராக:
என் கடவுளே, உமது அருகாமைக்கு எங்களை ஈர்க்கக் கூடியவற்றினை எங்கள்பால் அருளியமைக்காகவும் உம்மால் அனுப்பப்பட்ட திருநூல்களிலும் மறைநூல்களிலும் எங்களுக்குத் தந்து அருளிய ஒவ்வொரு நன்மைக்கும் உமது புகழ் போற்றி. என் பிரபுவே, எண்ணிலடங்கா பயனற்றக் கனவுகளிலிருந்தும் வீண் கற்பனைகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். மெய்யாகவே வல்லவரும் எல்லாம் அறிந்தவரும் நீரே.
பிறகு அவர் தன் சிரசினை உயர்த்தி, அமர்ந்தவாறு இவ்வாறு கூறுவாராக:
என் கடவுளே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் எதற்குச் சாட்சியம் கூறினரோ அதற்கு நானும் சாட்சியம் கூறுகின்றேன். மிக உயர்வான சுவர்க்கத்தின் வாசிகளும், உமது ஆற்றல் மிக்க அரியணையை வலம் வருபவர்களும் எதனை ஏற்றுக் கொண்டனரோ அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். உலகங்களின் பிரபுவே, மண்ணுலக இராஜ்யங்களும் விண்ணுலக இராஜ்யங்களும் உமக்கே உரியவையாகும்.
- Bahá'u'lláh