Return to BahaiPrayers.net
Facebook
நீங்கள் கலந்தாலோசனை அறையில் நுழையும் பொழுதெல்லாம், இறைவனின் அன்பினால் துடிக்கும் உள்ளத்தோடும், அவரது நினைவைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தூய்மைப்படுத்தப்பட்ட நாவோடும் இப்பிரார்த்தனையைக் கூறுங்கள்; அதனால் நீங்கள் மகத்தான வெற்றியை அடைவதற்கு, சர்வசக்தி வாய்ந்தவர் உங்களுக்கு அருள் கூர்ந்து உதவக்கூடும்.
கடவுளே, என் கடவுளே! மகத்துவம் பொருந்திய இந் நாளில் உம்மைத் தவிர வேறு பற்றுகளை எல்லாம் துறந்து பக்தியுடன் உமது திருமுகம் நோக்கி நிற்கும் நாங்கள் உமது ஊழியர்களாவோம். எங்கள் கருத்திலும் சிந்தனையிலும் ஒன்றுபட்டு உமது திருமொழியினை மனித இனத்தின் மத்தியில் உயர்வுறச் செய்ய வேண்டும் என்ற நோக்க ஒற்றுமையுடன் நாங்கள் இவ்வான்மீகச் சபையில் கூடியிருக்கின்றோம். பிரபுவே, எங்கள் இறைவா! எங்களை உமது தெய்வீக வழிகாட்டுதலின் அடையாளங்களாகவும், மனிதர்களிடையே உமது உயரிய சமயத்தின் விருதுக்கொடிகளாகவும், உமது வலிமைமிகு ஒப்பந்தத்தின் ஊழியர்களாகவும்—எங்களின் அதி மேன்மையான பிரபுவானவரே—உமது அப்ஹா இராஜ்யத்தினில் உமது தெய்வீக ஒற்றுமையின் வெளிப்படுத்துதலாகவும், எல்லாப் பகுதிகளிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விண்மீன்களாகவும் ஆக்குவீராக. பிரபுவே! உமது வியத்தகு அருள் அலைகள் நிறைந்த கடலாகவும், உமது ஒளிமயமான உச்சத்திலிருந்து வழிந்தோடும் நீரோடைகளாகவும், உமது விண்ணுலகச் சமயமெனும் விருட்சத்தின் மீதுள்ள இனிய கனிகளாகவும், உமது வள்ளன்மை என்னும் தென்றல் காற்றினில் அசைந்தாடிடும் திராட்சைத் தோட்டத்தின் மரங்களாகவும் ஆகிட எங்களுக்கு உதவி புரிவீராக. கடவுளே! உமது அருட்பொழிவினால் எங்களின் உள்ளங்களைக் களிப்புறச் செய்து, எங்களின் ஆன்மாவை உமது தெய்வீக ஒற்றுமையென்னும் வாசகங்களைச் சார்ந்திருக்கச் செய்வீராக; அதனால் நாங்கள் ஒரே கடலின் அலைகள் போல் ஒன்றிணைந்து, உமது பிரகாசமிக்கத் தீபத்தின் ஒளிக்கதிர்கள் போல் ஒன்றிணைந்திடுவோமாக; அதனால் எங்கள் சிந்தனைகள், கருத்துகள், உணர்ச்சிகள் ஆகிய யாவும் ஒரே மெய்ப்பொருளாகி, உலக முழுவதிலும் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்திடுமாக. நீரே அருள்மிகுந்தவர், வள்ளன்மை மிக்கவர், வழங்குபவர், எல்லாம் வல்லவர், கருணைமிக்கவர், இரங்குபவர்.
— அப்துல்-பஹா
- `Abdu'l-Bahá