Return to BahaiPrayers.net
Facebook
கித்தாப்-இ-அகடாசில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “பருவ முதிர்ச்சியின்(15 வயதில்) ஆரம்பத்திலிருந்து நீ பிரார்த்தனையிலும் உண்ணா நோன்பிலும் ஈடுபட வேண்டுமாய் யாம் கட்டளையிட்டுள்ளோம்; இது உனது தேவரும், உனது முன்னோர்களின் தேவருமாகிய உனது கடவுளால் விதிக்கப்பட்டுள்ளது . . . . பயணி, நோயுற்றோர், கர்ப்பிணி அல்லது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுபவள் ஆகியோர் நோன்பு நோற்றலால் கட்டுப்படுத்தபடார் . . . . சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு உட்கொள்வதையும் நீர் பருகுவதையும் தவிர்த்திடுங்கள்; கவனமாய் இருங்கள், இல்லையெனில் ஆவல், அதி புனித நூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கிருபையினை உங்களிடமிருந்து பறித்திடப்போகிறது.”
என் இறைவா, நீர் உமது அன்புக்குரியவர்களை உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ள நாள்களின் முதல் நாள் இதுவே ஆகும். தனக்காகவும், தன் ஆசைக்காகவும் அல்லாது உமது வெஞ்சினத்தின் பயம் காரணமாகவும் அல்லாது, உமது தன்னகத்தின் சாட்சியாகவும் உந்தன் மீதுள்ள அன்பிற்காகவும், உமது நல்விருப்பத்திற்காகவும் நோன்பிருந்து, உமது அதி சிறப்புமிகு நாமங்கள், மாண்புறும் பண்புகள் மீது ஆணையாகவும், உம்மைத் தவிர மற்றெல்லாவற்றின் மீதும் உள்ள அன்பிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்திடுமாறும், உமது வதனமெனும் ஒளிகளின் உதயஸ்தல அண்மை, உமது ஒருமைத்தன்மை எனும் அரியணையின் ஆசனம் ஆகியவற்றுக்கு அவர்களை ஈர்த்திடுமாறும் உம்மைக் கேட்கின்றேன். என் இறைவா, உமது அறிவெனும் ஒளியைக் கொண்டு, அவர்கள் உள்ளங்களை ஒளிபெறச் செய்தும், உமது விருப்பம் எனும் தொடுவானத்திலிருந்து பிரகாசிக்கும் பகல் நட்சத்திரத்தின் கதிர்களால் அவர்களின் முகங்களைப் பொலிவடையவும் செய்திடுவீராக. உமக்கு விருப்பம் தரவல்லவற்றைச் செய்திட நீர் வலிமையுடையவராக இருக்கின்றீர். மனிதர் அனைவரும் உதவி கோரி அழைக்கும், சர்வ மகிமைமிக்கக் கடவுள் உம்மையன்றி வேறிலர்.
என் கடவுளே, உம்மை வெற்றி பெறச் செய்யவும், உமது திருவாக்கினை மேன்மையுறச் செய்யவும் அவர்களுக்கு உதவிடுவீராக. உமது நினைவுகள் மற்றும் புகழ்ச்சி, உமது நிரூபணங்கள், உமது அடையாளங்கள் ஆகிவற்றினால் உலகம் முழுவதையும் அந்தளவுக்கு நிறைந்திடச் செய்வீராக. அதனால் உமது ஊழியர்களிடையே உமது சமயத்தின் கரங்கள் போன்றும் மனுக்குலத்தினிடையே உமது சமயத்தையும், உமது அடையாளங்களையும் வெளிப்படுத்து-பவர்களாக அவர்கள் ஆகிடக்கூடும். மெய்யாகவே, நீரே சர்வ தாராள குணமுடையவரும், அதி மேன்மையானவரும் , ஆற்றல் மிக்கவரும், வலிமை வாய்ந்தவரும், தயாள குணமுடையவரும் ஆவீர்.
- Bahá'u'lláh