Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, இவைதாம், உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு நீர் உமது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டுள்ள நாள்கள். அதனுடன், நீர், உமது படைப்பினங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள உமது சட்டங்கள் என்னும் திருநூலின் முன்னுரையை அழகுப்படுத்தி, உமது விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரின் பார்வையிலும் உமது கட்டளைகளின் கருவூலங்களை அலங்கரித்திடச் செய்தீர். படைப்பினம் அனைத்தின் அறிவையும் உள்ளடக் கியுள்ள, வேறு எவராலும் ஊடுருவ இயலாத, ஒரு விசேஷ பண்பினை இந் நாள்களின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அருளியுள்ளீர். மேலும், நீர், உமது கட்டளை என்னும் நிருபத்திற்கு ஏற்பவும், உமது மாற்றவியலாத தீர்ப்பு எனும் நூல்களுக்கு ஏற்பவும், இப்பண்பிலிருந்து ஒரு பகுதியினை ஒவ்வோர் ஆன்மாவிற்கும் அருளியுள்ளீர். மேலும், மண்ணுலுகிலுள்ள மக்களும் இனங்களுமாகிய மனிதர் ஒவ்வொருவருக்கும், இந் நூல்களிலும் மறை நூல்களிலுமுள்ள ஒவ்வோர் ஏட்டினையும் வழங்கியுள்ளீர்.
ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளரே, உமது கட்டளைகளுக்கேற்ப உமது ஆர்வமிகு அன்பர்களுக்கு ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும், உமது நினைவு என்னும் கிண்ணத்தை ஒதுக்கி வைத்துள்ளீர்! உமது பல்கூறு விவேகம் என்னும் திராட்சை ரசத்தினால் அவர்களை மயங்கச் செய்து உமது புகழைக் கொண்டாடவும், உமது நற்பண்புகளைப் போற்றிப் புகழவும் உமது முன்னிலையை அணுகி உமது அருட்-கொடையினைப் பெறும் ஆர்வத்திலும் தங்கள் துயிலையும் துறந்துள்ளனர். அவர்களின் கண்கள், உமது அன்புப் பரிவு என்னும் பகலூற்றின்பால் எல்லா வேளைகளிலும் பதிக்கப்பட்டுள்ளன; அவர்களின் முகங்கள் உமது அருட்தூண்டல் என்னும் ஊற்றின்பால் திருப்பப்பட்டுள்ளன. ஆதலின், உமது வள்ளன்மை, அருள் என்னும் விண்ணுலகிற்கு ஏற்ப, உமது கருணை என்னும் மேகங்களிலிருந்து எங்கள் மீதும் அவர்கள் மீதும் பொழிவீராக.
என் இறைவா, உமது நாமம் போற்றப்படுமாக! உமது படைப்பினங்களின் முகங்களுக்கு முன் உமது அருட்கொடை என்னும் கதவுகளைத் திறந்து, உமது மண்ணுலகில் வாழ்வோர் அனைவர்பாலும், நீர், உமது மென்கருணை என்னும் வாயில்களை அகலத் திறந்துள்ள நேரம் இதுவே. உமது பாதையில் எவரால் இரத்தம் சிந்தப்பட்டதோ, எவர் உந்தன்பால் கொண்ட ஆர்வ மிகுதியினால் உமது படைப்பினம் அனைத்திடமிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொண்டனரோ, எவரின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் உமது அருட்தூண்டலின் இனிய நறுமணங்களினால் அந்தளவு உற்சாகமடைந்ததன் காரணமாக உமது புகழ்பாடி உமது நினைவினால் அதிர்வுற்றதோ, அவர்களின் பெயரால், நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன், உம்மிடம் உரையாடிய மோஸஸிடம் அன்று எரிந்திடும் புதர் பிரகடனப்படுத்தியதனை ஒவ்வொரு விருட்சமும் கூக்குரலிடச் செய்திடுமளவு சக்தி பெற்றதானதொரு வெளிப்பாடும் உமது நண்பராகிய முஹம்மதுவின் நாள்களில் கற்கள் உம்மைப் புகழ்ந்துரைத்தது போல் மிகச் சாதாரணமான ஒவ்வொரு கூழாங் கல்லையும் மீண்டும் உமது புகழ்ச்சியினால் ஒலிக்கச் செய்ததொரு வெளிப்பாடுமாகிய இவ் வெளிப்பாட்டினுள் மாற்றவியலாது நீர் கட்டளையிட்டுள்ள பொருள்களை எங்களுக்குக் கொடுக்காதிருந்து விடாதீர்.
என் இறைவா, உம்முடன் தோழமை கொள்ளவும், உம்மை வெளிப்படுத்தியவரான அவருடன் தோழமை கொள்ளவும், நீர் கிருபை கூர்ந்து உதவியவர்கள் இவர்களேயாவர். அவர்களை நீர் உமது நிழலின் கீழ் ஒன்று சேர்த்து உமது அவையினுள் அவர்களை நுழையச் செய்திடும் வரை, உமது விருப்பம் என்னும் காற்றுகள் அவர்களைச் சிதறிச் செல்லுமாறு செய்துள்ளன. இப்பொழுது உமது கருணை என்னும் விதானத்தின் கீழ் இருக்கச் செய்துள்ளதன் காரணமாக அத்தகையதோர் உயரிய ஸ்தானத்திற்குப் பொருத்தமானதனை அடைவதற்கு அவர்களுக்கு உதவிடுவீராக. என் பிரபுவே, உமது அருகிலிருக்கும் பாக்கியம் பெற்றிருந்தும் உமது வதனத்தை அறிந்து கொள்ளத் தவறி, உம்மைச் சந்தித்தபோதிலும் உமது முன்னிலையை அடையத் தவறியும் உள்ளோரின் எண்ணிக்கையில் அவர்களைச் சேர்த்திடாதீர்.
என் பிரபுவே, இவர்கள்தாம் இவ்வதி மேன்மையான சிறையினில் உம்முடன் பிரவேசித்துள்ள ஊழியர்கள்; அதன் சுவர்களுக்குள்ளே, உமது ஆணை என்னும் நிருபங்களிலும் கட்டளை என்னும் நூல்களிலும் ஆணையிட்டுள்ளதற்கேற்ப, உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தவர்கள் இவர்களே. நீர் வெறுத்திடும் அனைத்திலிருந்தும் அவர்களை முற்றாகத் தூய்மைப்படுத்தவல்ல ஒன்றினை அவர்கள்பால் அனுப்பியருள்வீராக; அதனால் அவர்கள் முழுமையாக உந்தன்மீது பக்தி கொண்டவர்களாக உம்மைத் தவிர மற்றெல்லா-வற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொள்ளக் கூடும்.
எனவே, என் இறைவா, உமது அருளுக்கு உகந்த வற்றையும் உமது வள்ளன்மைக்குப் பொருந்தியவற்றையும் எங்கள் மீது பொழிவீராக. மேலும், என் இறைவா, உமது நினைவில் நாங்கள் வாழ்ந்திடவும் உமது அன்பில் நாங்கள் மரித்திடவும் எங்களுக்கு உதவி புரிந்து, வரவிருக்கும் உலகங்களில் — உம்மைத் தவிர வேறெவருக்குமே விளங்கிடாத உலகங்களில் — உமது முன்னிலை என்னும் அன்பளிப்பினை எங்களுக்கு அருள்வீராக. எங்களின் பிரபுவும் எல்லா உலகங்களின் பிரபுவும், விண்ணுலகிலுள்ள அனைத்திற்கும் மண்ணு-லகிலுள்ள அனைத்திற்கும் இறைவனானவர் நீரே.
என் இறைவா, உமது நாள்களில் உமது அன்பர்களுக்கு நேர்ந்துள்ளதை நீர் காண்கின்றீர். உமது ஒளியே எனக்குச் சாட்சி பகர்கின்றது! உமது இராஜ்யம் முழுவதிலும், உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோரின் ஓலம் எழுப்பப்பட்டுள்ளது. உமது தேசத்தில் சமய நம்பிக்கையற்றோரிடம் சிலர் சிக்கிக் கொண்டு, உந்தன்பால் நெருங்கு-வதிலிருந்தும், உமது ஒளி என்னும் அரசவையினை அடைவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர், உம்மை அணுக முடிந்தும், உமது வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்து தடுக்கப்பட்டனர்.
இன்னும் சிலர் அனுமதிக்கப்பட்டனர்; ஆனால், உம்மைக் கண்ணுற வேண்டும், உமது அரசவையினுள் நுழைய வேண்டும் என்ற பேராவலினால் உமது உயிரினங்களின் கற்பனைகள் என்னும் முகத் திரைகளையும் மனிதர்களிடையே உள்ள கொடுமையாளர்கள் இழைத்திட்டத் தீங்குகளையும் அவர்களுக்கும் உமக்கும் இடையே வந்திட அனுமதித்து விட்டனர்.
என் பிரபுவே, நீர் மற்றெல்லா நேரத்தையும் விஞ்சிடச் செய்த நேரம் இதுவே; அதனையே நீர் உமது படைப்பினங்களுக்கு மத்தியில் அதி சிறப்பு வாய்ந்தோருடன் தொடர்புப்படுத்தியுள்ளீர். என் இறைவா, உமது தானெனும் தன்மையின் மீதும், அவர்கள் சாட்சியாகவும், இவ்வாண்டின்போது உமது அன்பர்களை மேன்மையுறச் செய்வதனை அவர்களுக்கு அருளுமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், உமது சக்தி என்னும் பகல் நட்சத்திரத்தினை உமது மகிமை என்னும் தொடுவானத்திற்கு மேலாகப் பொலிவுடன் பிரகாசிக்கச் செய்யக் கூடியதனை, உமது இறைமை சக்தியால், உலகம் முழுவதையும் ஒளிரச் செய்திடக் கட்டளையிடுவீராக.
என் பிரபுவே, உமது சமயத்தை வெற்றி பெறச் செய்து, உமது எதிரிகளைத் தாழ்வுறச் செய்வீராக. ஆகவே, இவ்வுலக வாழ்விலும் வருவுலக வாழ்விலும் நன்மை அளிக்கவல்லதனை எங்களுக்கென எழுதி வைப்பீராக. உண்மையாகவே, நீரே, பொருள்களின் இரகசியங்களை அறிந்தவர். என்றும் மன்னிப்பவரும், வள்ளன்மை மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh