Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, உம் மீதுள்ள அன்பிற்காக உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்து, உமது அருவருப்புக்கு ஆளாகிடும் யாவற்றையும் தவிர்த்துள்ளோரின்பால், “நவ்ரூஸ்” என்ற விழாவினை விதித்துள்ளீர் என்பதற்காக நீர் போற்றப்படுவீராக. உமது அன்பெனும் நெருப்பும், உம்மால் கட்டளையிடப்பட்ட உண்ணா நோன்பின் பயனாகத் தோன்றிடும் வெப்பமும், அவர்களை உமது சமயத்தில் எழுச்சியுறச் செய்து, சதா உமது புகழ்ச்சியிலும் நினைவிலும் ஈடுபட்டிருக்கச் செய்திடுமாக.
என் பிரபுவே, உம்மால் உத்தரவிடப்பட்ட உண்ணா நோன்பு என்னும் அணிகலனைக் கொண்டு, அவர்களை நீர் அலங்கரித்திருப்பதனால், உமது அருளின் மூலமாகவும், வள்ளன்மைமிகு தயையின் மூலமாகவும், உமது “ஏற்றுக்கொள்ளல்” என்னும் அணிகலனைக் கொண்டு அவர்களை அலங்கரிப்பீராக. ஏனெனில், மனிதர்களின் செயல்கள் யாவும், உமது நல்விருப்பத்தைப் பொறுத்தும், உமது கட்டளைக்கு உட்பட்டுமே உள்ளன. உண்ணா நோன்பினைக் கைவிட்டுள்ள ஒருவரை, அதனைக் கடைப்பிடித்தவர் என நீர் கருதுவீராயின், அத்தகைய மனிதர் ஊழூழி காலம் முதல் உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்து வந்திருப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார். மேலும், உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்த ஒருவரை, அதனைக் கை-விட்டவரென நீர் தீர்ப்பு அளிப்பீராயின், அந் நபர், உமது வெளிப்பாடு என்னும் அங்கியினைப் புழுதியினால் கறைப்படுத்தி, இவ்வுயிரூற்றின் தெளிந்த நீருக்கப்பால் வெகுதூரம் விலக்கப்- பட்டோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார்.
உமது மூலமாகத்தான் “உமது வேலைப்-பாடுகளிலெல்லாம் நீர் போற்றத்தகுந்தவர் ஆவீர்” எனும் விருதுக்கொடி உயர்த்தப்பட்டுள்ளது, “உமது கட்டளைகளில் நீர் அடி பணியப்படுவீர்” எனும் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. என் இறைவா, உமது இந்த ஸ்தானத்தை உமது ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவீராக; அதனால் அனைத்துப் பொருள்களின் உயர்வும், உமது கட்டளைக்கும் உமது திருவாக்கிற்கும் உட்பட்டதே என்பது அவர்களுக்கு உணர்த்தப்படுமாக; ஒவ்வொரு செயலின் மேன்மையும், உமது அனுமதியையும், உமது தீர்மானம் என்னும் நல்விருப்பத்தையும் பொறுத்தே உள்ளது என்பதையும், மனிதர்கள் செயல்களின் ஆட்சி அதிகாரங்கள் யாவும், உமது ஏற்பு, உமது கட்டளை ஆகியவற்றின் பிடியிலேயே அடங்கியுள்ளன என்பதையும், அவர்கள் அடையாளங் கண்டிடுவராக. இந் நாள்களில் உமது அழகினை நோக்குவதிலிருந்து, எதுவுமே அவர்களைத் தடுத்திட இயலாது என்பதனை அவர்கள்பால் அறிவித்திடுவீராக; இது குறித்து கிறிஸ்து உணர்வு ததும்பக் கூறுவதாவது,” ஆவியானவரைத் (இயேசுவைத்) தோற்றுவித்தவரே, ஆட்சி அனைத்தும் உம்முடையதே”; மேலும் உமது நண்பரான (முஹம்மது) உரத்துக் கூக்குரலிடுவதாவது: “அதி நேசிக்கப்படுபவரே, புகழெல்லாம் உமக்கே உரியதாகுக; ஏனெனில், தங்கள் அழகினை வெளிப்படுத்தி, எது உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோரை அதி உயரிய நாமத்தின் வெளிப்பாட்டின் இருக்கையை அடையச் செய்திடுமோ, அதனை அவர்களுக்கு எழுதியருளியுள்ளீர். இவ்வதி உயரிய நாமத்தின் மூலமே, உம்மையன்றி மற்றெல்லாவற்றிலிருந்தும் பற்றறுத்து உம்மை வெளிப்படுத்துபவராகவும், உமது குணங்களின் அவதாரமாகவும் திகழும் அவரை நோக்கித் திரும்பிய உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரைத் தவிர, மற்றெல்லா மக்களும் அழுது புலம்பினர்.
என் பிரபுவே, உமது விருட்சத்தின் கிளையும், உமது தோழர்களாகிய இவர்களும், உம்மை மகிழ்விக்கும் பேரார்வத்தினால், உமது அரசவையின் சூழிடங்களுக்குள் உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தபின், இன்று, அதனை முடித்துக் கொண்டுள்ளனர். அவருக்கும், அவர்களுக்கும், கடந்த காலத்தில் உமது முன்னிலையை அடைந்தோருக்கும், உமது திருநூலில் நீர் விதித்துள்ளவை அனைத்தையும் கிடைக்கச் செய்திடுவீராக. ஆகவே, இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு நன்மையளிக்கக் கூடியவற்றினை, அவர்களுக்கு வழங்கிடுவீராக.
உண்மையாகவே, நீரே சர்வ ஞானி, சர்வ விவேகி.
- Bahá'u'lláh