Return to BahaiPrayers.net
Facebook
இந் நிருபம் பஹாவுல்லா, பாப் ஆகியோரின் புண்ணிய ஸ்தலங்களில் வாசிக்கப்படவேண்டும். அவர்களின் ஆண்டு நினைவு நாள்களை நினைவு கூர்வதற்கும், இந் நிருபம் பயன்படுத்தப்படுகின்றது.
பேரழகின் வெளிப்படுத்துதலே, நித்தியத்தின் மன்னரே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் உள்ளோர் அனைவருக்கும் பிரபுவானவரே! உமது அதி மேன்மைமிகு தானெனும் தன்மையிலிருந்து உதித்துள்ள புகழ்ச்சியும், உமது ஜோதிமிகு அழகிலிருந்து பிரகாசித்திடும் ஒளியும் உம்மீது இலயித்திடுமாக! உம் மூலமாகவே ஆண்டவனின் இறைமையும் அவரது அரசும், அவரது மகிமையின் மேன்மையும், வெளிப்படுத்தப்பட்டு, பூர்வீக ஒளியின் விடிவெள்ளிகள் உமது மாற்றவியலாத கட்டளையெனும் வானத்தைப் பிரகாசமடையச் செய்து, படைப்புகளின் மீது, அரூபியானவரின் அழகினை வியாபிக்கச் செய்துள்ளீர் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன். உமது எழுதுகோலின் ஒரே அசைவினால் உமது “ஆகு” என்னும் கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது, இறைவனின் மறைந்துள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்-பட்டுள்ளன; படைப்புப் பொருள்களெல்லாம் சிருஷ்டிக்கப்பட்டு, வெளிப் படுத்துதல்கள் யாவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, நான் மேலும் சாட்சியம் பகர்கின்றேன்.
உமது அழகின் வாயிலாக, அன்புக்குப் பாத்திரமானவரின் அழகு வெளிப்படுத்தப்-பட்டுள்ளது என்பதற்கும், உமது வதனத்தின் மூலமாக ஆவலுக்குரியவரான அவரின் வதனம் ஒளிர்வுற்றுள்ளது என்பதற்கும், உம்மிடமிருந்து ஒரே சொல்லினால் நீர் படைப்புப் பொருள்கள் அனைத்திற்கும் இடையே தீர்ப்பளித்து, அதன்மூலம் உந்தன்பால் பக்தி கொண்டோரை, ஒளி என்னும் உச்சத்தை அடையவும், சமய நம்பிக்கையற்றோரை அதிபாதாளத்தில் தள்ளவும் செய்துள்ளீர் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்.
உம்மை அறிந்தவர் கடவுளை அறிந்தவர் என்பதற்கும், உமது முன்னிலையை அடைந்தவர் இறைவனின் முன்னிலையை அடைந்தவர் என்பதற்கும், நான் சாட்சியளிக்கின்றேன். உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது ஆட்சியின் முன் தன்னைத் தாழ்வுப்படுத்திக் கொண்டு, உம்மைச் சந்திக்கும் பெருமை வழங்கப்பட்டு, உமது சித்தம் என்னும் நல்விருப்பத்தினை அடைந்து, உம்மை வலம் வந்து, உமது அரியாசனத்தின் முன் நிற்பவரின் ஆசி உயர்வானதாகும். உமக்கு எதிராக நடந்தவர்கள், உம்மை நிராகரித்தவர்கள், உமது அடையாளங்களை மறுத்தவர்கள், உமது ஆட்சியை எதிர்த்துப் பேசியவர்கள், உமக்கெதிராக எழுந்துள்ளவர்கள், உமது வதனத்தின்முன் செருக்கை வளரவிட்டவர்கள், உமது சான்றுகளைக் குறித்து வாதிட்டவர்கள், உமது ஆட்சியிலிருந்தும், உமது அரசிலிருந்தும் ஓட்டமெடுத்திட்ட இவர்கள், உமது கட்டளை என்னும் விரல்களினால், உமது புனித நிருபங்களில் பொறிக்கப்பட்டுள்ள சமய நம்பிக்கை அற்றோரது பெயர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுப், பெருந் துயருக்குள்ளாவர்.
என் கடவுளே, என் நேசரே, உமது கருணை எனும் வலது கரத்திலிருந்தும், உமது அன்புப் பரிவிலிருந்தும், உமது தயை என்னும் தெய்வீக மூச்சினை என்பால் மிதந்து வந்திடச் செய்வீராக, அதனால் என்னை, என்னிடமிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுவித்து, உமது முன்னிலை என்னும் அரசவையை அடையச் செய்வீராக. நீர் விரும்பியதைச் செய்திடும் சக்தி படைத்தவர் நீரே. நீர், உண்மையாகவே, அனைத்துப் பொருள்களையும் விட அதி மேன்மையானவராக இருந்து வந்திருக்கின்றீர்.
அவரின் அழகானவரே! இறைவனின் நினைவும், அவரின் புகழ்ச்சியும், கடவுளின் ஒளியும் அவரின் பிரகாசமும், உம் மீது இலயித்திடுமாக. படைப்பின் கண்கள் உம்மைப்போல் தீங்கிழைக்கப்பட்ட ஒருவரைக் கண்டதே இல்லை என்பதற்கு, நான் சாட்சியம் அளிக்கின்றேன். நீர், உமது வாழ்நாள் முழுவதும், கடுந் துன்பம் என்னும் கடலின் ஆழத்தில் அமிழ்ந்திருந்தீர். ஒரு வேளையில் சங்கிலியாலும், விலங்கினாலும் பிணைக்கப்பட்டுக் கிடந்தீர்; மற்றொரு வேளை, பகைவர்களின் வாளேந்திய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தீர். இருந்தும், அவையனைத்திற்கும் மாறாக, நீர், சர்வ ஞானியும், சர்வ விவேகியுமானவரினால் கட்டளை இடப்பட்டிருந்தவற்றை, எல்லா மனிதர்களையும் கடைப்பிடிக்குமாறு விதித்திட்டீர்.
நீர் அனுபவித்திட்டத் தீமைகளுக்காக எனது ஆவி பலியிடப்படுமாக; நீர் தாங்கிக் கொண்ட தொல்லைகளுக்காக எனது ஆன்மா பிணைமீட்பாகுமாக. உம் மூலமாகவும் உமது வதனத்தினின்று தோன்றும் ஒளியினால் பிரகாசமுற்ற முகங்களினாலும், உம் மீதுள்ள அன்பினால், தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தவர்கள் மூலமாகவும், உமக்கும், உமது உயிரினங்களுக்குமிடையே தோன்றியுள்ள திரையினை விலக்கி, இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள எல்லா நன்மைகளையும் எனக்களிப்பீராக. நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர், ஒளிமயமானவர், என்றும் மன்னிப்பவர், அதி இரக்கமுடையவர்.
பிரபுவே, எனதாண்டவரே, உமது அதி உயர்வான பட்டங்கள் நிலைத்திருக்கும் வரையிலும், அதி நேர்த்தியான பண்புகள் நீடிக்கும் வரையிலும் இப்புனித விருட்சத்தினையும் அதன் இலைகளையும், அதன் கிளைகளையும் கொப்புகளையும், நடுத்தண்டுகளையும் தளிர்களையும், ஆசீர்வதிப்பீராக. ஆகவே, அதனைத் தாக்குவோரின் விஷமத்திலிருந்தும், கொடுங்கோன்மைப் படைகளிடமிருந்தும் அதனைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, நீர், எல்லாம் வல்லவர், அதிசக்திவாய்ந்தவர். பிரபுவே, என் இறைவா, உம்மை அடைந்துள்ள உமது ஊழியர்களையும், பணிப்பெண்களையும், ஆசீர்வதிப்பீராக. நித்திய அருளினைக் கொண்டுள்ள நீர், உண்மையாகவே, வள்ளன்மையே உருவானவர். என்றும் மன்னிப்பவரும், அதி தாராள குணமுடையவருமான இறைவன், உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh