Return to BahaiPrayers.net
Facebook
அப்துல்-பஹாவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இப்பிரார்த்தனை அவரது புனித ஸ்தலத்தில் கூறப்படவேண்டியதாகும். தனிப்பட்ட முறையிலும் இப்பிரார்த்தனையைக் கூறலாம்.
“எவரொருவர் பணிவுடனும், உணர்ச்சியுடனும் இப்பிரார்த்தனையைக் கூறுகின்றாரோ, அவர் இவ்வூழியனின் உள்ளத்திற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் ஊட்டிடுவார்; அது அவரை நேருக்கு நேர் சந்திப்பது போன்றதுமாகும்.”
அவரே எல்லா மகிமையும் கொண்டுள்ளவர்!
கடவுளே, என் கடவுளே! கற்றோர்களின் அறிவுக்கும், உமது மகிமையை எடுத்துரைப்போரின் புகழ்ச்சிக்கும் எட்டாத உமது வாயிலின் புழுதியில் எனது முகத்தைப் புதைத்துத், தாழ்மையுடனும், நீர் மல்கிய கண்களுடனும், எனது கெஞ்சிடும் கரங்களை உம்பால் உயர்த்துகின்றேன். பணிவுடனும் தாழ்மையுடனும் உமது வாயிலில் நிற்கும் இவ்வூழியனை, உமது கருணை என்னும் கடைக்கண் பார்வையினால் அருள்கூர்ந்து நோக்கி, அவனை உமது நித்திய அருள் என்னும் சமுத்திரத்தினுள் மூழ்கச் செய்வீராக.
பிரபுவே! உந்தன்பால் கவரப்பட்டும், உம்மை வேண்டிக் கொண்டும், உமது கரந்தனில் கைதியாகவும், தணியாப் பற்றுடன் உம்மைப் பிரார்த்தித்துக் கொண்டும், உம்மில் நம்பிக்கை வைத்தும், உமது வதனத்தின் முன்னால் கண்ணீருடனும், உம்மைக் கூவி அழைத்து, உம்மைக் கெஞ்சிய வண்ணமாய், ஏழ்மையான, பணிவான உமது இவ்வூழியன் இவ்வாறு கூறுகின்றான்:
பிரபுவே, என் இறைவா, உமது அன்பர்களுக்கு ஊழியம் செய்ய எனக்கு அருள் புரிவீராக; உமது சேவையில் என்னைப் பலப்படுத்துவீராக, உமது புனிதம் என்னும் அரசவையினில் பூஜித்தல் என்னும் ஒளியினையும், உமது பேரழகு என்னும் இராஜ்யத்தின்பால் பிரார்த்தனையையும் கொண்டு, எனது நெற்றியினை ஒளிரச் செய்வீராக. உமது தெய்வீக நுழைவாயில் என்னும் வாயிற்கதவின் முன்னால், நான் தன்னலமற்றவனாய் ஆவதற்கு உதவி புரிவீராக; உமது புனிதச் சுற்றெல்லைக்குள் உள்ள அனைத்துப் பொருள்களின்பாலும் பற்றற்றவனாய்த் திகழ்வதற்கு எனக்கு உதவி புரிவீராக. பிரபுவே! தன்னலமின்மை என்னும் கிண்ணத்திலிருந்து என்னைப் பருகச் செய்வீராக; அதன் அங்கியினைக் கொண்டு, எனது உடலைப் போர்த்துவீராக; அதன் சமுத்திரத்தில் என்னை மூழ்கச் செய்வீராக. அதி உயர்விலுள்ள ஒளியின் அதிபரே, உமது அன்பர்களின் பாதையில் என்னைத் தூசாக்கி, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உமது வழியில் நடப்போரின் பாதங்கள் பட்டு, அதனால் உயர்வடைந்துள்ள நிலத்திற்கு, நான் எனதான்மாவை அர்ப்பணிக்க அருள் புரிவீராக.
காலை வேளைகளிலும், இரவுக் காலங்களிலும், உமது ஊழியன், இப்பிரார்த்தனையைக் கொண்டு உம்மை அழைக்கின்றான். பிரபுவே! அவனது உள்ளத்தின் ஆவலைப் பூர்த்தி செய்வீராக. அவனது உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக, அவனது நெஞ்சத்தை மகிழ்வுறச் செய்வீராக, அவனது சுடரினைத் தூண்டுவீராக, அதனால் அவன் உமது சமயத்திற்கும் உமது ஊழியர்களுக்கும் சேவை செய்திடக் கூடும்.
நீரே வழங்குபவர், இரக்கமிக்கவர், அதிவள்ளன்மையாளர், அருள்மிகுந்தவர், கருணைமிக்கவர், தயாள குணமுடையவர்.
- `Abdu'l-Bahá